சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட சங்கர் - கௌசல்யா தம்பதியை கடந்த 2016 மார்ச் 13-ம் தேதியன்று, உடுமலையில் பட்டப்பகலில் ஒரு கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டியது. அதில், சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். கெளசல்யா, படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்றுக் குணமடைந்தார்.
சங்கர் படுகொலை தொடர்பாக கொலை, வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் உடுமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கெளசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, கெளசல்யாவின் மாமா பாண்டித்துரை மற்றும் மணிகண்டன், மைக்கேல் (எ) மதன், செல்வக்குமார், ஜெகதீசன், தன்ராஜ், தமிழ்கலைவாணன், பிரசன்னா, எம்.மணிகண்டன் ஆகிய 11 பேரை கைதுசெய்தனர்.
இதில், கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கிய திருப்பூர் வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், ஆறு பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்தும், மற்றொருவருக்கு இரட்டை ஆயுளும், அடைக்கலம் தந்தவருக்கு ஐந்து ஆண்டுகளும் தண்டனை விதித்தது. மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதன்பிறகு, சாதியம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் கௌசல்யா ஈடுபட்டு வந்தார். ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றும்வரை நான் போராடுவேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று கோவை பெரியார் படிப்பகத்தில் கௌசல்யா மறுமணம் செய்து கொண்டார். நிமிர்வு கலையகத்தின் ஒருங்கிணைப்பாளர் சக்தி என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார்.
இவரிடம் தான் கெளசல்யா பறை இசைக் கலையை கற்றார். இந்த திருமணத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிறுவனர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டினன், வன்னி அரசு மற்றும் எவிடன்ஸ் கதிர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் தம்பதிகள் இருவரும் உறுதிமொழி ஏற்று தங்களின் வாழ்க்கையை தொடங்கினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.