கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23 ஆம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது.
இதில் உயிரிழந்த நபர் உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பது தெரியவந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: கோவை காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம்.. 5 பேர் கைது
இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “கோவை உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் முபின் என்ற நபர் தீக்காயங்களுடன் இறந்தார்.
இது தொடர்பாக, உக்கடம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அப்பகுதி காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு தடயங்களை பாதுகாத்து அறிவியல் பூர்வமாக அனைத்து புலன் விசாரணையும் நடந்து வருகிறது.
12 மணி நேரத்தில் உயிரிழந்த நபரை கண்டறிந்தோம். வெடித்து சிதறிய கார் 10 பேரிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது அவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக நேற்றிரவு 5 பேரை கைது செய்துள்ளோம். அவர்கள் மீது யு.ஏ.பி.ஏ எனப்படும் உபா சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டு சதி, இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்துதல், உபா சட்டம் ஆகிய பிரிவுகளிலும் 5 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக 20 க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம். சந்தேகப்படும் நபர்களை விசாரித்தும், அவர்களின் வீடுகளை சோதனை செய்தும், அவர்களை கண்காணித்தும் காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. உடனடியாக காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுவரை நடந்த புலன் விசாரணை அடிப்படையில் முபின் காரில் வந்த போது, அப்பகுதியில் காவல் துறை பீட் இருந்ததால் தப்பிச் செல்ல முயன்ற போது சிலிண்டர் வெடித்து இருக்கக் கூடும்.
எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாத வகையில் தீபாவளி பண்டிகை கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேறு யார், யார் சம்மந்தப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் கேரளா சென்று வந்துள்ளார். எதற்காக சென்று வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
ஊகங்கள் அடிப்படையில் பல தகவல்கள் சென்று கொண்டுள்ளது. தடயவியல் ரிப்போர்ட் வந்த பின்பு முழுமையாக தகவல் கிடைக்கும். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சிலரை என்.ஐ.ஏ. விசாரணை நடத்தியுள்ளது. முபின் வீட்டில் இருந்து இரண்டு சிலிண்டர், 3 கேன் டிரம் உள்ளிட்டவை காரில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அதில் என்ன பொருட்கள் இருந்தது என்பது குறித்து தடயவியல் ரிப்போர்ட் அனுப்பியுள்ளோம். 3 பேர் சிலிண்டர் தூக்க உதவி செய்துள்ளனர். ஒருவர் ஒருங்கிணைப்பு செய்துள்ளார். ஒருவர் காரினை தயார் செய்து தந்துள்ளார்.
கோவை மாநகரில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு, கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.