கோவை அன்னூர் அருகே பெரிய புத்தூர் பகுதியில் பொருள் வாங்க வந்தது போல் நடித்து இளம் பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர்களின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பெரிய புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரேணுகா. இவர் அந்த கிராமத்தில் மளிகை கடை, கால்நடை தீவனம், எலக்ட்ரிக்கல் ஹார்ட்வேஸ் கடை ஆகியவற்றை நடத்தி வருகிறார். இவருக்கு உறுதுணையாக அவரது மகள் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர்களது கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் பொருட்கள் வாங்குவது போல் நடித்து பாவனை செய்துள்ளனர். அப்போது கடைக்கு வந்த மற்றொரு முதியவர் அந்த கடையில் கால்நடைக்கு தீவனம் வாங்கிக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் அந்த மூட்டையை ஏற்றிய போது, அந்த வாகனம் கீழே விழ கடையின் உரிமையாளரான ரேணுகா மற்றும் அவரது மகள் இருவரும் முதியோருக்கு உதவி செய்ய சென்றனர்.
இந்த சூழலில் வாய்ப்புக்காக காத்திருந்த இருசக்கர வாகனத்தில் வந்திருந்த மர்ம நபர்கள் அவர்களுக்கு உதவுவது போல நடித்து அருகில் சென்று ரேணுகாவின் மகள் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க நகையை கழுத்தில் இருந்து அறுத்து வழிபறி செய்ய முயன்றுள்ளனர். நல்வாய்ப்பாக செயின் அறுந்து விழாமல் தப்பிய நிலையில், அந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் அங்கிருந்த தப்பி ஓடினர்.
இந்த சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், தற்போது அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“