கோவையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அனைத்து மதத்தினரும் இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர். ஆலயத்திற்கு சிறப்பு பிரார்த்தனைக்கு வந்த பொது மக்களுக்கு இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் இணைந்து பூங்கொத்து மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.
இயேசு கிறிஸ்து பிறந்தநாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் இதனை முன்னிட்டு சிறப்பு ஜெபவழிபாடு, கூட்டுப் பிரார்த்தனை ஆகியவை நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள புனித சின்னப்பர் ஆலயத்தில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து கேக் வெட்டி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு வழிபாட்டிற்காக ஆலயத்திற்கு வருகை தந்த பொதுமக்கள், குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோருக்கு மூன்று மதத்தினரும் பூங்கொத்து மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.
சமத்துவம் மற்றும் சகோதரத்தை போற்றும் வகையில் அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடியது பலரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவை டவுன்ஹால் புனித மைக்கேல் ஆதி தூதர் பேராலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு திருப்பலி நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இயேசு கிறிஸ்து பிறப்பை போற்றும் விதமாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் ரோமன் கத்தோலிக்க பிரிவினரால் அனுசரிக்கப்படும் நள்ளிரவு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று இயேசு கிறிஸ்துவிடம் பாவ மன்னிப்பு பெருவர்.
இந்த நிலையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவை டவுன்ஹால் பகுதியிலுள்ள புனித மைக்கேல் ஆதித்தூதர் பேராலயத்தில் நள்ளிரவு பிரார்த்தனை வெகு விமரிசையாக நடைபெற்றது. பேராலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதுடன் குழந்தை இயேசு பிறப்பை போற்றும் விதமாக குடில் அமைக்கப்பட்ட அதில் குழந்தை இயேசு உருவ பொம்மை வைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் தலைமையில் திருப்பலி நிகழ்ச்சியானது துவங்கிய நிலையில் குழந்தை இயேசுவை கையிலேந்திய ஆயர் தாம்ஸ் அக்வினாஸ் அங்கிருந்தவர்கள் மத்தியில் வலம் வந்து தேவாலய வளாகத்தில் வைக்கப்படிருந்த திருப்பலி பீடத்தில் வைத்து சிறப்பு ஆராதனைகள் செய்தார். தொடர்ந்து நடைபெற்ற நள்ளிரவு கூட்டு பிரார்த்தனையில் கிறிஸ்து பிறப்பின் மகிமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இதனிடையே நள்ளிரவு கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழத்துக்களையும் தெரிவித்து கொண்டனர்..
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.