கடந்த 2019-ம் ஆண்டு கோவை மேட்டுப்பாளையத்தில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய முயன்ற இருவரை ஆணவக்கொலை செய்த வழக்கு, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள எஸ்.சி/எஸ்.டி வழக்குகளை வழக்கும் விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
காதலர்களான வர்சினிப்பிரியா மற்றும் கனகராஜ் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்த கனகராஜின் சகோதரன் வினோத்குமார் உட்பட நால்வர் கைது செய்யபட்டனர். இந்த வழக்கில் கொலை செய்த வினோத்குமாருடன் சேர்த்து, குற்றத்திற்கு தூண்டியதாக கந்தவேல், சின்னராஜ், அய்யப்பன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி விவேகானந்தர் முன்னிலையில் இன்று விசாரணை நடந்தது. இதில் மரண தண்டனை வரை கொடுக்கலாம் என்பதால் 29-01-2025 தேதி அன்று தண்டனை பற்றி வாதம் நடத்தப்படும். அதுமட்டுமின்றி குற்றவாளி தொடர்பாக சிறைத்துறை நிர்வாகத்திடம் நீதிமன்றம் விளக்கமும் கேட்கப்படும். தண்டனை குறித்து இரு தரப்பு வாதமும் 29 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
வினோத்குமார் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கந்தவேல், அய்யப்பன், சின்னராஜ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பால் நிரூபிக்கப்படவில்லை என்பதால் மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.