/indian-express-tamil/media/media_files/2025/09/22/kovai-court-bomb-2025-09-22-14-10-36.jpg)
கோவை நீதிமன்றத்தில் ஆர்.டி எக்ஸ் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக இ-மெயில் வந்ததையடுத்து காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை, ஒருங்கிணைந்த நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ளது. இங்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உள்ளிட்ட ஏராளமான நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வழக்கறிஞர்கள் உள்பட 4 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 6. 48 மணிக்கு நீதிமன்ற மெயில் முகவரிக்கு இ - மெயில் மூலம் மிரட்டல் வந்தது. அதில் நீதிமன்ற வளாகத்தில் சில இடங்களை குறிப்பிட்டு அதில் ஆர்.டி. எக்ஸ் பாம் வைக்கப்பட்டு உள்ளதாகவும், 2 மணி நேரத்தில் அது வெடிக்கும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்து மாவட்ட நீதிமன்றம் சார்பில் கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. உடனே நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு காவல் துறையினர் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் விரைந்து சென்றனர்.
அங்கு நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்கள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், நுழைவு வாயில் பகுதிகள், பொருட்கள் வைக்கும் இடங்கள், கழிப்பறைகள் என அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு நிபுணர்கள் சல்லடை போட்டு அலசி தேடினர்.
ஆனால் பல மணி நேரம் நடந்த சோதனைக்கு பிறகு அங்கு வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என தெரிய வந்தது. எனவே வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவரும் நிம்மதி அடைந்தனர். இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் கடிதம் இமெயில் மூலம் அனுப்பிய நபர் யார்? இதற்காக அனுப்பினார் என்று விசாரணை நடந்து வருகிறது.
ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், விமான நிலையம், பள்ளிகள் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டுகள் இ-மெயில் மூலம் வந்தன. அதை அனுப்பிய நபர் யார்? என சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாசல்கள் முன்பு போலீசார் நிறுத்தப்பட்டு தீவிர சோதனைக்கு பிறகு பொதுமக்கள் உள்ளிட்ட நபர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர சோதனை செய்யப்பட்ட பிறகு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.