/indian-express-tamil/media/media_files/2025/05/19/EHb3zx3conxa2wQEfoC9.jpg)
கோடையின் வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறிய தாய் யானை ஒன்று திடீரென மயங்கி விழுந்து உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதை அடுத்து தாய் யானைக்கு சிகிச்சை அளிக்க நேற்று ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கும்கி யானை துரியன் கொண்டு வரப்பட்டது. மேலும் நேற்று மாலை சுயம்பு என்ற யானை கொண்டு வரப்பட்டு இரண்டு யானைகள் உதவியுடன் வனத் துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கும்கி யானைகள் அங்கு இருப்பதை தொடர்ந்து தாயை பிரிந்து சென்ற குட்டி யானை மீண்டும் அப்பகுதிக்கு வரவில்லை என்றும் அதனை வனத்துறை குழுவினர் தேடி கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
கோவை, மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேற்கு பகுதியில் நேற்று முன்தினம் தாய் யானை அதன் குட்டியும் நீண்ட நேரம் அசையாமல் நின்று கொண்டு இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கோவை வனசரகர் திருமூர்த்தி தலைமையிலான வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை கண்காணித்து வந்தனர்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக தாயான உடல்நிலை குறைவால் மயங்கி விழுந்தது. மயங்கி விழுந்த தாய் யானை உடலில் சிறிது நேரத்திற்கு பின் அசைவு தெரியவே, அருகில் இருந்த குட்டி யானை பதற்றம் அடைந்தது. தனது தாயை எப்படியாவது? எழுப்பி விட வேண்டும் என்று தவிப்புடன் தனது சிறிய தும்பிக்கையால் தாயின் உடலை தட்டி எழுப்ப முயற்சித்தது. இந்த உருக்கமான காட்சி அங்கு இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
யானையின் நிலைமை மோசம் அடையவே, வனத் துறையினர் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோருக்கு தகவல் அளித்தனர். அவர்களின் அறிவுறுத்தலின்படி கால்நடை மருத்துவ குழுவினரும் கோவை வனக் குழுவினரும் இணைந்து தாய் யானையை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
நேற்று அதிகாலை முதல் ஆனைமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் சதாசிவம் ஆகியோர் தாய் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் படுத்து கிடந்த பெண் யானையை நிற்க வைக்க சிகிச்சை அளிப்பதற்காக, நேற்று கும்கி யானை துரியன் உதவியுடன் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து யானை கூட்டம் வந்தால் சிகிச்சை அளிப்பதற்கு, சிரமம் ஏற்படும் என்பதற்காக நேற்று மாலை சுயம்பு என்ற மற்றொரு கும்கி யானை வர வழைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. மேலும் அந்தப் பெண் யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறும்போது; யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் யானை குணமடைந்து வன பகுதிக்குள் செல்வதற்கு வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. யானை நிற்க முடியாத நிலையில் இருந்தது தற்போது தானாக நிற்கும் நிலைக்கு வந்துள்ளது. தாயுடன் இருந்து குட்டி யானை வனப்பகுதிக்குள் வேறொரு கூட்டத்துடன் சென்று உள்ளது. அதனை வன ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். யானை முழுமையாக குணமடையும் வரை தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்படும் என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் இன்று காலை வன கால்நடை அலுவலர் மருத்துவர் சுகுமார், மருத்துவர் சதாசிவம், ஆனைமலை புலிகள் காப்பக மருத்துவர் விஜயராகவன், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக மருத்துவர் கலைவாணன் மற்றும் மருத்துவர் முத்துராமலிங்கம் ஆகிய ஐந்து மருத்துவர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் இன்று காலை முதல் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் விட்டமின் மாத்திரைகள், ஊட்டச்சத்து மருந்துகள், கும்கி யானைகளுக்கு கொடுக்கின்ற உணவுகளை அந்த பாதிக்கப்பட்ட யானையும் உண்பதாக வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர். மேலும் இன்று காலை யானையின் ரத்தம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி உள்ளதாகவும் கூறியவர்கள், மேலும் இரண்டு நாள் சிகிச்சைக்கு பின்னர் யானை நிலை குறித்து கூற முடியும் என தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.