Advertisment

3-வது முறை ஆட்சியில், கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்காக வேகமாக செயல்படுவோம் – மோடி

காங்கிரஸ், தி.மு.க அரசுகள் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு எதுவும் செய்யவில்லை – மோடி; தமிழகத்தில் பிறக்காத மறத் தமிழன் பிரதமர் மோடி – அண்ணாமலை; கோவை பா.ஜ.க பொதுக்கூட்ட ஹைலைட்ஸ்

author-image
WebDesk
New Update
modi

தமிழகத்தில் பிறக்காத மறத் தமிழன் பிரதமர் மோடி – அண்ணாமலை; கோவை பா.ஜ.க பொதுக்கூட்ட ஹைலைட்ஸ்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்யும் தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை என கோவையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.

Advertisment

வேலூரில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை முடித்த பிரதமர் மோடி, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மேட்டுப்பாளையம் வந்தார். பிரதமர் மோடியை பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பா.ஜ.க தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, நீலகிரி, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். 

அப்போது பேசிய மோடி, ”எனது அன்பான தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம். மேட்டுப்பாளையத்தின் இந்த புண்ணிய பூமியில் இருந்து உங்களை வணங்குகிறேன். இப்பகுதியில் உள்ள மருதமலை முருகன், கோணியம்மனை வணங்குகிறேன். மேட்டுப்பாளையத்துக்கு கோவையின் ஆற்றலும், நீலகிரியின் அழகும் பொருந்தியிருக்கிறது. இவ்வளவு தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதிக்கு வந்தால், ஒரு டீக்கடைக்காரருக்கு மகிழ்ச்சியாக இருக்காதா? விரைவில், தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடவுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்.

கொங்கு மண்டலத்தில் உள்ள நீலகிரி எப்போதுமே பா.ஜ.க.,வுக்கு முக்கியமான இடங்களாகும். காரணம், வாஜ்பாய் காலத்தில் நீங்கள்தான் பா.ஜ.க.,வுக்கு எம்.பி.யை தேர்வு செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பினீர்கள். தமிழகத்தில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் பா.ஜ.க.,வின் அலை வீசுகிறது. மக்கள் அனைவரும் பேசத் தொடங்கிவிட்டனர். தி.மு.க.,வுக்கு விடை கொடுக்க தயாராகி விட்டனர். அதனால்தான், நாம் மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்று கூறுகிறோம்.

தமிழகத்தில் மனித ஆற்றலும் திறமையும் கொட்டி கிடக்கிறது. அதை தி.மு.க. அரசு வீணடித்து வருகிறது. ஜவுளி தொழிலில் சிறந்து விளங்கும் கோவையில் மின் கட்டண உயர்வால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவை உள்ளிட்ட இரண்டு நகரங்களில் மாதிரி தளவாட பட்டறை, பூங்கா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மூன்றாவது முறை ஆட்சியின் போது, கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்காக வேகமாக செயல்படுவோம்.

மேக் இன் இந்தியா திட்டம் மூலம் இலக்கை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தை முடக்க நினைக்கும் தி.மு.க. தமிழகத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. காங்கிரஸ், தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் இருந்தன. எந்த கட்சி ஆட்சியாக இருந்தாலும் ஒவ்வொரு மாநிலமும் வளர வேண்டும் என்பதே பா.ஜ.க. அரசின் நோக்கம்.

எங்கள் அரசு இந்தியர்கள் மீது நம்பிக்கை வைத்தது. அவர்களுக்கு தடுப்பூசி தயாரித்தது. எதை முடியாது என்று சொன்னார்களோ, அதை நாங்கள் செய்து காட்டினோம். அந்தக் காலத்தில் நாட்டின் பொருளாதாரம் அழிந்துவிடும் என்று எதிர்க்கட்சியினர் கூறினார்கள். திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்யும் தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை.

மக்கள் நலத் திட்டங்களை தி.மு.க. அரசு அதன் கட்சிக்காரர்களுக்கு வழங்குகிறது. தி.மு.க. அரசு எப்போதுமே வெறுப்பு அரசியலை பின்பற்றி வருகிறது. தி.மு.க., இந்தியா கூட்டணியின் கொள்கை சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவது மட்டுமே. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டபோது தி.மு.க. அதை எதிர்த்தது. சனாதன தர்மத்தை அழிப்போம் என்று மிரட்டுகிறார்கள். காங்கிரஸ், தி.மு.க அரசுகள் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு எதுவும் செய்யவில்லை. எங்களுடைய அரசு 25 கோடி ஏழை மக்களை வறுமைக்கோட்டில் இருந்து மீட்டுள்ளது.

தி.மு.க.வின் தேசியத்துக்கு எதிரான கொள்கையை அகற்றும் தேர்தல் இது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாரிசு அரசியல், போதைப்பொருள் உள்ளிட்டவை அகற்றப்படும். இந்தியாவில் இருந்து ஊழலை அகற்றும் தேர்தல் இது.

கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, மற்றும் திருப்பூரில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களின் வெற்றி, தமிழகத்துக்கான புதிய பாதையை திறக்கப் போகிறது. அண்ணாமலை, எல்.முருகன் வெற்றி பெற்றால் உங்கள் குரலாக என்னிடம் ஒலிப்பார்கள்.” இவ்வாறு மோடி கூறினார்.

தமிழக பா.ஜ.க தலைவரும் கோவை தொகுதி பா.ஜ.க வேட்பாளருமான அண்ணாமலை பேசுகையில், “தி.மு.க.,வில் அப்பாக்கள் அமைச்சர்கள், மகன்கள் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், அவர்களுக்கு பிரச்சாரம் செய்வது முதல்வரின் மகன் உதயநிதி. 2ஜி அலைக்கற்றை மோசடியில் திகார் சிறை சென்றவர் ஆ.ராசா. அதன் பிறகு அடுத்த வாரமே கனிமொழியும் சிறையில் அடைக்கப்பட்டார். தி.மு.க உடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் அரசாங்கத்தாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதிலும் இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற எம்.பி.,க்களில் மிக மோசமான எம்.பி ஆ.ராசாதான். பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசிய ஆ.ராசா, நீலகிரியில் டெபாசிட் வாங்கக் கூடாது. தமிழகத்தில் பிறக்காத மறத் தமிழன் பிரதமர் மோடி. ஆனால் தமிழின் பெருமையை கும்மிடிப்பூண்டியை தாண்ட விடாமல் தடுத்தது தி.மு.க.,தான்,” என்று பேசினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Pm Modi Annamalai kovai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment