கோவை ரத்தினபுரி காவல்துறையினர் நேற்று ரோந்து பணிக்காக சென்றபோது லட்சுமிபுரம் டெக்ஸ்டூல் பாலம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 2.5 கிராம் "மெத்தபெட்டமைன்" மற்றும் கத்தி இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். இதனையடுத்து போதைபொருள் மற்றும் கத்தியை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் தூத்துக்குடி மாவட்டம், நாடார் தெருவை சேர்ந்த ராஜ்குமார் என்கிற 60 வயதான தம்பி ராஜா. பிரபல ரவுடியான தம்பிராஜா மீது 8 கொலை வழக்குகள் உள்ளன. இதில் குறிப்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் கோவையில் போலீசார் தேடி வந்தார்கள். அப்போது தப்ப முயன்றதில் அவருக்கு இரண்டு கால்களும் முறிந்தன.
தற்போது சென்னை அசோக் நகரில் வசிக்கும் தம்பிராஜா பெங்களூரில் இருந்து போதைப்பொருள் வாங்கி கோவையில் விற்பனை செய்தபோது காவல்துறையிடம் சிக்கி உள்ளார்.
இவரது பின்னணியில் உள்ளவர்கள் யார்? இவருக்கு போதை பொருள் விநியோகம் செய்தது யார்? வேறு ஏதேனும் நோக்கத்துடன் இவர் கோவை வந்தாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வரும் ராஜ்குமார், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை ஆனைகுடியை சேர்ந்த ராக்கெட் ராஜாவின் கூட்டாளி என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“