கோவையில் நடத்துனரிடம் தகராறு செய்த நபரிடம் இருந்து 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அது ஹவாலா பணமா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் என்பவர் கோவை மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்து ஒன்றில் ஏறியுள்ளார். அப்போது தான் வைத்திருந்த கைப்பைக்கு டிக்கெட் எடுக்காமல் இருந்துள்ளார்.
இதையும் படியுங்கள்: மாலத்தீவு தீ விபத்து; கன்னியாகுமரிச் சேர்ந்த கணவன் – மனைவி மரணம்
இதனால் நடத்துனர் கைப்பை வைத்திருந்த குமாரை டிக்கெட் எடுக்க வலியுறுத்தியுள்ளார். ஆனால் குமார் டிக்கெட் எடுக்க மறுத்ததால் நடத்துனருக்கும், குமார் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நடத்துனர் பேருந்தை காட்டூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று புகார் அளித்தார். அப்போது விசாரித்த காவல் துறையினர், குமார் வைத்திருந்த சந்தேகத்திற்கிடமான பையை சோதனை மேற்கொண்டதில் அந்த கைப்பையில் கட்டு கட்டாக பணம் வைத்திருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் பணத்தை எண்ணி பார்த்தபோது 80 லட்ச ரூபாய் இருந்துள்ளது. இதுகுறித்து குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் பைனான்ஸ்-க்காக வைத்திருந்த பணம் என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பணத்திற்கான போதிய ஆவணங்கள் இல்லாததால் குமாரை கைது செய்த காட்டூர் நிலைய காவல் துறையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இது ஹவாலா பணமா இருக்க கூடுமோ என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil