தீவிரவாத பயங்கரவாத செயல்களுக்கு இந்தியாவில் மத அடையாளம் பூசப்படுவதாக SDPI கட்சியினர் தெரிவித்துள்ளனர். காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு SDPI கட்சியின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
உக்கடம் பகுதியில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் மத்திய மாவட்ட தலைவர் முகமது இசாக், இந்த தாக்குதலுக்கு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் இதில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாகவும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/04/25/yqaRfsG9hd2TL1Xk7o6j.jpg)
இதுபோன்ற செயல்களை யார் செய்தாலும் தவறு என்கின்ற பார்வையில் பார்க்க வேண்டும் என கூறிய அவர் ஆனால் இதுபோன்ற தீவிரவாத பயங்கரவாத செயல்களுக்கு இந்தியாவில் மத அடையாளம் பூசப்படுவதாக தெரிவித்தார்.
பயங்கரவாத செயல்கள் யார் செய்தாலும் அவர்களது மதங்களையோ இனங்களையோ ஜாதிகளையோ குறிப்பிட்டு சொல்லாமல் அவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்ற பார்வையில் தான் மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தற்பொழுது நடைபெற்று வரும் ஆட்சியில் எந்த சம்பவம் நடந்தாலும் அதனை மதத்தோடு சேர்ந்து பேசுகின்ற நிகழ்வு தான் நடைபெற்று வருவதாகவும் இந்த வகுப்புவாத பேச்சும் வெறுப்புவாத பேச்சும் பயங்கரவாதத்திற்கு ஒப்பானவை என்றே கருதப்படுவதாக தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் 370 வது சட்டப்பிரிவு அகற்றியதற்குப் பிறகு உலகில் அனைத்து பகுதிகளிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வரலாம் காஷ்மீரில் அமைதி திரும்பி விட்டது தீவிரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது என்கின்ற மத்திய அரசாங்கத்தின் அறிவிப்பை தொடர்ந்து தான் சுற்றுலா பயணிகள் அங்கு வருகை தந்திருப்பதாகவும் ஆனால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தவறியது மத்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு குறைபாடு என விமர்சித்தார்.
மேலும் அங்கு கொலை செய்யப்பட்டவர்கள் பெயரை கேட்டு மதத்தை கேட்டு ஆடைகளைக் களைந்து அதற்குப் பிறகு கொலை செய்யப்பட்டார்கள் என்கின்ற தவறான வதந்தியும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக அதற்கு எஸ்டிபியை கட்சி கண்டனத்தை தெரிவிப்பதாக தெரிவித்தார்.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்