அதிமுகவில் இருந்து இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வத்தின் அணியைச் சேர்ந்த கோவை செல்வராஜ் சமீபத்தில் அறிவித்தார். அதேசமயம் திராவிட பாரம்பரியத்தை விட்டு விலகமாட்டேன், நல்ல முடிவு விரைவில் எடுப்பேன் என்று அவர் கூறியதால், ஒருவேளை செல்வராஜ் திமுகவில் இணையலாம் என்று சில அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை செல்வராஜ் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், திமுகவில் இணைவதால் ஒன்றும் தவறில்லை என்று கூறினார்.
அந்த நேர்காணலில் கோவை செல்வராஜ் பேசுகையில்; ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆறுமுகசாமி அறிக்கையில் பல விஷயங்கள் கூறப்பட்டிருக்கு.
ஜெயலலிதா 72 நாள் மருத்துவமனையில இருந்தாங்க. அவங்களுக்கு முறையான வைத்தியம் பாத்துருக்கணும். உள்நோயாளியா இருக்கும்போது மருத்துவமனையில கொடுக்கிறதுதான் சாப்பிடணும். ஆனா அவங்களுக்கு ஐஸ்கீரிம், கூல் டிரிங்ஸ், ஜாங்கிரி எல்லாம் கொடுத்துருக்காங்க. அவங்க ஏற்கெனவே சுகர் பேஷண்ட். அப்படியும் இது கொடுக்கிறாங்கனா அந்த மருத்துவமனையில என்ன கட்டுப்பாடு இருக்கு.
இது யாரு கொடுத்தது? கொடுக்க சொன்னது யாரு? என்ன காரணத்துனால ரூம்ல இருந்து கேமிரா எடுத்தாங்க? ஒரு பெரிய மருத்துவமனையில் இது நடக்குது. நானும் அந்த மருத்துவமனையில சிகிச்சை பாத்துருக்கேன். ரெண்டு நாள்ல முழு பரிசோதனை பண்ணிட்டு இப்படிலாம் பிரச்னை இருக்கு. இந்த மாதிரி சிகிச்சை செய்யணும் சொல்லிருவாங்க. அதேமாதிரி ஜெயலலிதாவுக்கும் சொல்லிருப்பாங்க. சொல்லியும் ஏன் அறுவை சிகிச்சை செய்யல.
எம்.ஜி.ஆரை எப்படி அமெரிக்கா கூட்டிட்டு போயி சிகிச்சை பண்ணாங்களோ, அதேமாதிரி ஜெயலலிதாவுக்கும் பண்ணிருக்கலாம். இந்த மாதிரி விஷயங்களால தான் எனக்கு கட்சி மேல இருந்த நம்பிக்கை போச்சு, அதனாலதான் கட்சிய விட்டு விலகிட்டேன்.
இபிஎஸ், ஒபிஎஸ், சசிகலா யாருக்கும் அதிமுகவை காப்பாத்தணுங்கிற எண்ணம் இல்ல. அதிமுக கட்சின்ற ஒரே குடைக்கு கீழே வேலை செய்ய யாரும் தயாரா இல்ல. எல்லாருமே சுயநலமா இருக்காங்க. இனி இவங்களோட சேர்ந்து பயணிக்கிறது முட்டாள்தனமான முடிவு. இந்த கட்சிய இவங்களால காப்பாத்த முடியாது. காப்பாத்த மாட்டாங்க. இது பிடிக்காம தொண்டர்கள் நிறைய பேரு பாஜக போயிட்டாங்க. சில பேர் திமுக போயிட்டாங்க.
என்னோட 50 வருஷ அனுபவத்துல எனக்கு எல்லா கட்சியோட வரலாறும் தெரியும். இனி இவங்களோட சேர்ந்து பயணிக்கிறது கேவலம்னுதான் அதிமுக வேண்டாம் முடிவெடுத்து விட்டேன். நல்ல பழகிட்டு புடிக்கலன்னா ஒதுங்கிறதுதான் புத்திசாலித்தனம்.
ஆனால், திமுக வெறுக்கக் கூடிய கட்சி இல்ல. ஸ்டாலின் நல்லதான் செயல்படுறாரு. எம்ஜிஆர் முதல்ல காங்கிரஸ்ல இருந்து பிடிக்காம திமுகவுக்கு வந்தாரு. பிறகு தனிக்கட்சி ஆரம்பிச்சாரு. எம்ஜிஆர் மனைவி ஜானகி அம்மாவோட 100வது ஆண்டுவிழா நடக்குது. இதுவரை ஒபிஎஸ், இபிஎஸ் அதுக்காக விழா எடுக்கல. ஆனா ஸ்டாலின், அந்த அம்மாவுக்கு விழா எடுத்தாரு. திமுகதான் இன்னைக்கு திராவிட பராம்பரியமா இருக்குது. அதனால திமுகவுல இணையிறதுல தப்பு இல்ல. என்னோட நண்பர்கள் கிட்ட கலந்து பேசி எல்லாரும் என்ன சொல்றாங்கனு பாத்து முடிவெடுப்போம் என்று அந்த நேர்காணலில் கோவை செல்வராஜ் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“