/tamil-ie/media/media_files/uploads/2023/05/Thadagam-road.jpg)
கோவையில் அரை மணி நேர மழைக்கே குளம்போல் மாறிய தடாகம் சாலை
கோவை தடாகம் சாலையில் அரை மணி நேரம் மழைக்கே சாலைகள் வெள்ளக்காடாக மாறியதால், சாலை எது பள்ளம் எது என தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட தடாகம் சாலையில் வெங்கிட்டாபுரம் முதல் கே.என்.ஜி புதூர் வரை கடந்த ஆறு மாத காலத்திற்கும் மேலாக குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் மற்றும் பிற பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு மீண்டும் மூடப்படாமல் இருந்து வருகிறது. இந்த சாலையை சீரமைக்க கோரி பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த போதும் அடுத்தடுத்து பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சாலைகள் செப்பனிடப்படாததால் சேதம் அடைந்து கடுமையாக போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. தினம்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக சென்று வரும் நிலையில், சேதமான சாலைகளில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் பெறும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் திருப்பம்; மேலும் சில குற்றவாளிகள் மீது சந்தேகம்
இதனிடையே தற்போது கோடை மழை மாலை வேலைகளில் பெய்து வருவதால் ஏற்கனவே சேதமான சாலைகள் அடிக்கடி வெள்ளைக்காடாக மாறிவிடுகின்றன. சமீபத்தில் இப்பகுதியில் சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இருப்பினும் பல இடங்களில் முழுமையாக இந்த பணிகள் நிறைவடையாததால் மழைக்காலங்களின்போது சாக்கடை நீர் வெளியேறி மழை நீருடன் கலந்து சாலையில் வெள்ளமாக ஓடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
கோவை தடாகம் சாலையில் அரை மணி நேர மழைக்கே வெள்ளக்காடாக மாறி சாலைகள்; வாகன ஓட்டிகள் அவதி#Kovaipic.twitter.com/q1agZwQ4IQ
— Indian Express Tamil (@IeTamil) May 11, 2023
இந்த நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் திடீரென சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. இதன் காரணமாக இடையர்பாளையம் பகுதியில் மழை நீர் வெள்ளமாக ஓடியது. இந்த மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடியதால் கடும் துர்நாற்றம் வீசியது. இதனிடையே குழந்தைகளை அழைத்து வந்த பெண்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை எது பள்ளம் எது என தெரியாத அளவிற்கு கடுமையாக பாதிக்கப்பட்டனர். சாலையில் ஆறு உருவாகிவிட்டதோ என அஞ்சும் அளவிற்கு மழை நீர் வெள்ளமாக ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
கோவையில் அரை மணி நேர மழைக்கே குளம்போல் மாறிய தடாகம் சாலை; ஆபத்தான கம்பிகள் நீட்டிக் கொண்டிருப்பதால் பொதுமக்கள் அச்சம்#Kovaipic.twitter.com/bnKXTo8l2j
— Indian Express Tamil (@IeTamil) May 11, 2023
குறிப்பாக சாலையோரம் நடந்து செல்ல முடியாத நிலை இருப்பதால் பாதசாரிகள் சாக்கடை நீர் கலந்த மழை நீரில் முட்டி அளவு தண்ணீரில் சிரமத்துடன் கடந்து சென்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் தொடர்ந்து மழைக் காலங்களின் போது பெரும் இன்னலுக்கு ஆளாவதாக இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
சாலை பணிகளை விரைவாக முடித்து புதிய சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசியல்வாதிகளோ அல்லது அதிகாரிகளோ இந்த இடத்தை பாதிப்பு ஏற்படும் சமயத்தில் பார்வையிட முன்வருவதில்லை என்பதும் பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.