கடந்த 6 ஆண்டுகளில் கோவை மண்டல ஜி.எஸ்.டி.யில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூபாய் 3000 கோடி ஜி.எஸ்.டி., வருவாய் கடந்தாண்டு முதன் முறையாக எட்டியதுடன், அதுவே இதுவரை பெறப்பட்ட வருவாயில் அதிகமாகும் என கோவை ஜி.எஸ்.டி., முதன்மை ஆணையர் குமார் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி., தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் கோவை ஜி.எஸ்.டி., முதன்மை ஆணையர் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த 6 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி. வருவாய் மட்டுமின்றி வரி செலுத்துவோர் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. மேலும் 2017 ஆம் ஆண்டு 7.19 லட்சம் கோடியாக இருந்து, 2022-23 இல் 18.10 லட்சம் கோடியாக வருவாய் உயர்ந்துள்ளது.
இதையும் படியுங்கள்: பல கோடி வர்த்தகம் பாதிப்பு; அரசு எங்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும்: கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்கம்
இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும் 1.72 லட்சம் கோடி வருவாயாக உள்ளது. 2017 ஆம் ஆண்டு 19,000 கோடியாக இருந்த மாதந்திர வரி வருவாய் என்பது, 2022 ஆம் ஆண்டு 1,15,000 கோடி வரி வருவாயாக உயர்ந்து உள்ளது. கோவையை பொருத்தவரை 2017 ஆம் ஆண்டு ரூ.1106 கோடி வருவாய் என்பது, 2022 ஆம் ஆண்டு 3003 கோடி என்ற திட்டமிட்ட இலக்கை எட்டியதுடன், கடந்த 6 ஆண்டுகளில் பெறப்பட்ட அதிக வருவாயாகவும் உள்ளது.
வரி செலுத்துவோர் எண்ணிக்கையானது 2017 ஆம் ஆண்டு 67.83 லட்சமாக இருந்து, 2023 ஆம் ஆண்டு இரண்டு மடங்காக 1.40 கோடியாக உயர்ந்துள்ளது. கோவையை பொறுத்தவரை 2017 ஆம் ஆண்டு 53,800 ஆக இருந்து, 2022 ஆம் ஆண்டு 77,484 ஆக உயர்ந்துள்ளது.
வருவாயில் மட்டுமின்றி, வரி ஏய்ப்பு, வரியை எளிமையாக செலுத்துவதிலும் கடந்தாண்டு கவனம் செலுத்தப்பட்டது. வரி ஏய்ப்பு தொடர்பாக 112 கோடி மதிப்பிலான 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 47 கோடி வருவாய் கண்டறியப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டது. வரி ஏய்ப்பு கண்டறியப்படுவதில் 83% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது மற்றும் கடந்த ஆண்டு வரி ஏய்ப்பில் மீட்கப்பட்ட தொகை 134% ஆக உயர்ந்துள்ளது.
மேலும் வரி தாக்கலில் 2022-23 ஆம் ஆண்டு தொடக்கத்தில் 87% என்பது ஆண்டின் முடிவில் 97% மாக உயர்ந்திருந்தது, சேவை வரி, கலால் வரியை பொறுத்தவரை 26 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.30 கோடி பெறப்பட்டது, அதில் ரூ.18 கோடி ஜி.எஸ்.டி., யில் மட்டும் பெறப்பட்டது.
எம்.எஸ்.எம்.இ. வர்த்தக குழு அமைக்கப்பட்டு, ஜி.எஸ்.டி., கவுன்சிலில் எடுக்கப்படும் புதிய நடைமுறைகள் உடனுக்குடன் பல கூட்டங்கள், கருத்தரங்கள் மூலம் வரி செலுத்துவோர்களுக்கு நேரடியாக அதிகாரிகள் மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஏற்றுமதி முக்கியத்துவம் வாய்ந்த கோவை மாவட்டத்தில் ஜி.எஸ்.டி., வரியை திருப்பி (refund) அளிக்கும் நடைமுறை சரியான நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அதில் ரூபாய் 657 கோடி ரிபண்ட் தொகை என்பது கடந்தாண்டு 115 கோடி உயர்ந்து 772 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 60 நாட்களுக்குள் ரிபண்ட் வழங்க வேண்டும் என்ற சட்டம் இருக்கும் நிலையில், முறையான ஆவணங்கள் இருப்பின் முதல் 30 நாட்களில் திருப்பி அளிக்கப்படுகிறது. கடந்தாண்டு மத்திய அரசால் வரி தாமதமாக செலுத்தினால் விதிக்கப்படும் அபராதம் குறைப்பு, ("Input tax credit") தாமாக கணக்கீடு செய்யப்பட்டு தொழில்முனைவோர்கள் அறியும் வகையில் இணையத்தில் புதிய தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டு உள்ளது ஆகிய முன்னெடுப்புகள் எம்.எஸ்.எம்.இ. க்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாகும். சமீபத்தில் நாடு முழுவதும் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் எம்.எஸ்.எம்.இ. தொழில் சார்ந்த 88% நிறுவனங்கள் ஜி.எஸ்.டி.,யால் தங்களின் உற்பத்தி செலவு குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil