நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின், ஆட்டு தலையில் அண்ணாமலை படத்தை வைத்து ஆட்டை பலி கொடுத்த சம்பவம் தொடர்பான காவிரிபட்டிணம் காவல்நிலையத்தில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்கானிப்பாளர் தங்கதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தமிழக பா.ஜக தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். தேர்தலுக்கு முன்பாக அண்ணாமலை குறித்து பல்வேறு விமர்சனங்கள், மற்றும் ட்ரோல்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், பா.ஜக தரப்பில் இந்த ட்ரோல்களுக்கு பதிலடியும் கொடுக்கப்பட்டது.
இதனிடையே கடந்த ஜூன் 4-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வியை சந்தித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பல இடங்களில் ஆடு பலியிடப்பட்டு, அதன் ரத்தம் சாலைகளில், தெளித்து பலரும் கொண்டாடி தீர்த்தனர். இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவில், இது குறித்து புகார் அளித்தும், தமிழக அரசும் காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், முகமது ரபீக் ஆகியோர் கொண்ட அமர்வு, விசாரித்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான, வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, இது போன்ற கொடுமைகள் கிரிமினல் குற்றம் மட்டுமல்லாமல், விலங்குகள் வன்கொடுமை சட்டத்தின்படியும் குற்றமாகும்.
வரும்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் இருக்க, அரசியல் தலைவர்கள் படத்துடன் விலங்குகளை வெட்டி பலிகொடுப்பது, தடுக்கப்பட வேண்டும். இது குறித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இது போன்ற குற்றங்களை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அண்ணாமலை போட்டோவுடன் ஆடு பலியிட்ட சம்பவம் தொடர்பான காவிரிபட்டிணத்தில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்கானிப்பாளர் தங்கதுரை கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“