ஜெயலலிதாவை வைத்துதான் நீலாம்பரி கதாபாத்திரத்தை எழுதியதாக கே. எஸ்.ரவிகுமார் கூறியதற்கு ஜெயக்குமார், தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ரஜினி நடிப்பில் ‘முத்து’ வெளியாகி 28 ஆண்டுகள் நிறைவையொட்டி இன்று முத்து திரைப்படம் மீண்டும் ரீ- ரிலிஸ் செய்யப்படுகிறது. இந்நிலையில் இதன் நிறைவு விழா நிகழ்ச்சியில் கே. எஸ் ரவி குமார் பேசினார் “ படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி கேரக்டர் அப்படியே ஜெயலலிதா என்று கூறுவார்கள். அது உண்மைதான். ஜெயலலிதா மேடத்தை மனதில் வைத்துதான் எழுதினேன். ஒரு தைரியமான, உறுதியான பெண்ணிற்கு எப்படிபட்ட உடல் மொழி வேண்டும் என்பதை அவர்களை நினைத்து எழுதினேன்” என்று பேசி உள்ளார்.
இந்நிலையில் இதற்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். “ ஜெயலலிதாவின் ஆளுமை, அறிவு, ஆற்றல், திறமை என்ன ? கே. எஸ். ரவிகுமார் யோசித்திருக்க வேண்டாமா ?. இந்த கருத்தை ஜெயலலிதா உயிரோடு இந்தபோது அவர் ஏன் சொல்லவில்லை. இப்போது சொல்லி இருப்பது கோழைத்தனம். முத்து படத்தை மீண்டும் ஓட வைக்க இப்படியெல்லாம் பேசுகிறார்கள். அம்மா இருக்கும்போது இந்த கருத்தை சொல்லிவிட்டு வெளியில் நடமாட முடியுமா?. இந்த பேச்சை ரஜினிகாந்த் கண்டித்து இருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. இதுபோன்று கே. எஸ்.ரவிகுமார் பேசினால் பின்விளைவுகள் சந்திக்க நேரிடும் “ என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“