'தொலைத்துவிடுவேன்'... பொதுமேடையில் மாஃபா பாண்டியராஜனை பகிரங்கமாக மிரட்டிய ராஜேந்திர பாலாஜி

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொதுமேடையில் மாஃபா பாண்டியராஜனை தொலைத்துவிடுவேன் எனக் குறிப்பிட்டு பகிரங்கமாக மிரட்டியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
KT Rajenthra Bhalaji threatening AIADMK Ma Foi K Pandiarajan Tamil News

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொதுமேடையில் மாஃபா பாண்டியராஜனை தொலைத்துவிடுவேன் எனக் குறிப்பிட்டு பகிரங்கமாக மிரட்டியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க-வின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை அ.தி.மு.க-வினர் பெரும் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.  இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கடந்த 5-ம் தேதி கொண்டாடப்பட்ட இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, மாஃபா பாண்டியராஜன், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்த விழாவில், அ.தி.மு.க விருதுநகர் கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் நந்தகுமாரின் கன்னத்தில் மேடையிலேயே ராஜேந்திர பாலாஜி அறைந்தார். பிறகு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, நந்தகுமார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அ.தி.மு.க நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சால்வை அணிவிக்க வரிசையில் காத்திருந்த நிலையில், விருதுநகர் கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் நந்தகுமார் வரிசையில் நிற்காமல் அனைவரையும் முந்திக்கொண்டு ராஜேந்திர பாலாஜிக்கு சால்வை அணிவிக்க வந்தார். இதனைக் கண்ட ராஜேந்திர பாலாஜி, நந்தகுமாரின் கன்னத்தில் அறைந்தார் எனக் கூறப்பட்டது . 

இந்நிலையில், சிவகாசியில் நடந்த அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார். இக்கூட்டத்தில் பேசிய அவர், “மாவட்டச் செயலாளராக நான் இருக்கும்போது பல கட்சிக்கு சென்று விட்டு வந்தவருக்கு (மாஃபா பாண்டியராஜன்) பொன்னாடை போர்த்தினால் நான் எப்படி சும்மா விடுவேன். கட்சியைக் காட்டிக்கொடுத்தவர் மாஃபா பாண்டியராஜன். எனக்கு வரலாறு உள்ளது. உனக்கு என்ன வரலாறு இருக்கு?

நீ செய்வதெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க நான் ஒண்ணும் பைத்தியக்காரன் அல்ல, தொலைத்துவிடுவேன். நான் அ.தி.மு.க-வில் குறுநில மன்னர்தான். எனக்குப் பின்னால் உள்ள அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் வாள் ஏந்திய படை வீரர்கள். என்னைப் பற்றிப் பேச வேண்டுமானால் விருதுநகரில் வைத்துப் பேச வேண்டும். சென்னையில் சென்று ஏன் பேசுகிறீர்கள். விருதுநகரில் என்னை மீறி எதுவும் செய்ய முடியாது.

Advertisment
Advertisements

எடப்பாடி பழனிசாமிக்கு அரிவாள், துப்பாக்கி வந்தாலும் எதிர்த்து நின்று தாங்கி நிற்பேன். உன்னால் முடியுமா? அ.தி.மு.க-வை வாழவைக்க எந்த நிலைமைக்கும் நான் செல்வேன். எம்.ஜி.ஆரின் கையைப் பிடித்து ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட நான், எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டும் கட்டுப்படுவேன். வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும் அ.தி.மு.க இயக்கத்தில்தான் இருப்பேன். எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து குழி பறிக்கும் வேலை நடைபெற்று வருகிறது. நான் சி.பி.ஐ-க்கே பயந்தவன் அல்ல. தொலைத்து விடுவேன்” என்று முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜனுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார் ராஜேந்திர பாலாஜி.

Aiadmk Minister K T Rajendra Balaji Mafoi Pandiarajan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: