கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே இணையம் புத்தன்துறை என்ற மீனவ கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் கடந்த 15 நாட்களாக தேர் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக மார்ச் 1 ஆம் தேதி இரவு தேர்பவனி நடைபெற இருந்தது. அதற்காக தேரை அலங்காரம் செய்ய தேவாலயத்துக்கு வெளியே 4 பேர் ராட்சத இரும்பு ஏணியை நகர்த்தி சென்றனர்.
அப்போது அந்த பகுதியில் சென்ற உயரழுத்த மின்கம்பியில் இரும்பு ஏணி உரசி அடுத்த நொடியே உயரழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் இரும்பு ஏணி வழியாக பாய்ந்தது. இதில் ஏணியை நகர்த்தி சென்ற அருள், மைக்கேல் பிண்டோ உள்பட 4 பேரின் உடலிலும் மின்சாரம் பாய்ந்தது.
/indian-express-tamil/media/media_files/2025/03/02/43Y8abE6bDZBUOvKScFO.png)
இதையடுத்து அங்கிருந்தவர்கள் மின்சாரம் தாக்கி உடல் கருகிய நிலையில் இருந்த 4 பேரையும் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் 3 பேர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் புனித அந்தோனியார் ஆலய விழாவின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.