தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி சொந்த ஊர்களுக்கு பயணிக்க கும்பகோணம் கோட்டத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனையடுத்து பொதுமக்கள் முன்பதிவு செய்து பயணிக்குமாறு போக்குவரத்து துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் மேலான் இயக்குனர் ஆர். மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் வருகின்ற 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் எளிதாக எந்த சிரமமும், இடையூறும் இன்றி, பயணம் செய்ய ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட், சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய இடங்களுக்கு வருகின்ற 9 ஆம் தேதி (வியாழக்கிழமை) 250 கூடுதல் பேருந்துகளும், 10 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) 750 கூடுதல் பேருந்துகளும், 11 ஆம் தேதி (சனிக்கிழமை) 520 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
மேலும் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் 9.11.2023 அன்று 100 கூடுதல் பேருந்துகளும், 10.11.2023 & 11.11.2023 ஆகிய நாட்களில் 250 கூடுதல் பேருந்துகளும், அனைத்து முக்கிய நகரங்களில் அனைத்து நகரப் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது தவிர 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு தட பேருந்துகள், தாம்பரம் சானிடோரியம் (MEPZ) அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி. வேதாரண்யம் தட பேருந்துகள் கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது.
மேலும் தீபாவளி முடிந்து திரும்பும் அவரவர் ஊர்களுக்கு 12.11.2023, 13.11.2023, 14.11.2023 மற்றும் 15.11.2023 ஆகிய நாட்களில் மேற்குறிப்பிட்டவாறு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக கீழ்குறிப்பிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதி செய்யப்பட்டு வருகிறது.
சென்னை- திருச்சி, சென்னை - அரியலூர், சென்னை - ஜெயங்கொண்டம், சென்னை- கும்பகோணம், சென்னை - தஞ்சாவூர், சென்னை - பட்டுக்கோட்டை, சென்னை - புதுக்கோட்டை, சென்னை - மயிலாடுதுறை, சென்னை- காரைக்குடி, சென்னை- கரூர், சென்னை- இராமநாதபுரம், சென்னை- சிவகங்கை, சென்னை - வேளாங்கண்ணி, சென்னை- திருவாரூர், திருச்சி - கோயம்புத்தூர், திருச்சி - இராமேஸ்வரம், திருச்சி- கொடைக்கானல் ஆகிய வழித்தடங்களில் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்து கழகங்கள் கணித்து அதற்கேற்ப பேருந்து சேவையை அளிக்க ஏதுவாகவும் மற்றும் அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கும் முன்பதிவு சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மொபைல் ஆப் (மொபைல் ஆப்) ஆண்ட்ராய்டு / ஐ போன் கைபேசி மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகளின் வசதிக்காக பணிமனைகள் மற்றும் பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“