தேனி குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீயினால், 9 பேர் உயிரிழந்திருப்பத்தை அடுத்து, அவர்களை டிரக்கிங் அனுப்பிவைத்த வெளிநாட்டைச் சேர்ந்த நபரான பீட்டர், சென்னையில் உள்ள அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொழுக்குமலையில் ஏற்பட்ட தீயின்போது, டிரக்கிங் சென்ற 9 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களை சென்னை பாலவாக்கத்தில் வசிக்கும் பீட்டர் என்ற வெளிநாட்டு நபர்தான், டிரக்கிங் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. சென்னை டிரக்கிங் கிளப் என்ற பெயரில், மலையேற்றப் பயிற்சி அளித்து வரும் பீட்டர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மென்பொருள் நிறுவன ஊழியர்கள் 27 பேரை, கொழுக்குமலைப் பகுதிக்கு டிரக்கிங் அனுப்பியுள்ளார்.
அவர் அனுப்பி வைத்த தனியார் நிறுவன ஊழியர்கள், காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டதாக நேற்று இரவு செய்தி வெளியானவுடன், இரவோடு இரவாக அலுவலகத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டு நபரான பீட்டர், 27 பேரை டிரக்கிங் அனுப்பிய தகவலை அறிந்த நீலாங்கரை போலீசார், அவரது அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாகியுள்ள பீட்டரையும் தேடி வருவதாக கூறியுள்ளனர்.
மேலும், தேனி குரங்கணி காட்டுத் தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், அனைவரையும் மலையேற்றத்திற்கு அழைத்துச்சென்ற சுற்றுலா வழிகாட்டி ராஜேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.