கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, நாளை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நடைபெறுகின்றது. எந்த அரசியல் கட்சியும் செய்யாத வகையில் மிக பிரமாண்டமான மாநாடு நடைபெறுகிறது. அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கின்றார். என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வது மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இந்த என் மண் என் மக்கள் யாத்திரை தமிழகத்தில் உள்ள திமுக அரசின் ஊழல்களை மக்களிடம் எடுத்து செல்லும் யாத்திரையாகவும், திமுகவின் இயலாமையை எடுத்து சொல்லும் விதமாகவும், பிரதமரின் 10 ஆண்டு சாதனையை எடுத்து செல்லும் விதமாகவும் அமைந்தது. இந்த யாத்திரை 234 தொகுதிகளிலும் மிக வெற்றிகரமாக முடிவுற்றுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் இந்த யாத்திரைக்கு வரவேற்பு அளித்தார்கள். மக்கள் நாளை நடைபெறும் நிறைவு விழாவில் கலந்து கொள்வார்கள்.
தமிழகத்தில் ஊர் தோறும் கஞ்சா புழக்கம் அதிகமாக இருக்கின்றது. திமுக நிர்வாகியே 3000 கோடி போதை பொருள் கடத்தலி்ல் ஈடுபட்டுள்ளார். திமுக போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் கடத்தல்காரர்களுக்கு பாதுகாப்பாக இருந்திருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்த விஷயத்தில் திமுக தலைவர் ஸ்டாடலின், திமுக நிர்வாகி சம்மந்தமாக விளக்கம் அளிக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். பாஜகவில் யார் எல்லாம் இணைகின்றார்கள் என்பதை சிறிது நேரம் பொறுத்து இருந்து பாருங்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தலைவர்கள் பொதுகூட்டத்தில் பங்கேற்கின்றனர் எனத் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான்