தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. தி.மு.க இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், வி.சி.க, ம.தி.மு.க, சி.பி.எம். சி.பி.ஐ, ஐ.யூ.எம்.எல் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. தி.மு.க 21 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் 19 தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
இதில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்( ஐ.யூ.எம்.எல்) கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தி.மு.க கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறது. ஐ.யூ.எம்.எல் கட்சியின் சார்பில் தற்போது எம்.பியாக உள்ள நவாஸ் கனி மீண்டும் அங்கு களம் காண்கிறார். அக்கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் கடந்த வாரம் அறிவித்தார்.
தொடர்ந்து கடந்த முறை போன்று தி.மு.க கூட்டணியில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் கூறினார். அதன்படி, ஏணி சின்னம் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஐ.யூ.எம்.எல். சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஐ.யூ.எம்.எல் கோரிக்கையை ஏற்று இந்திய தேர்தல் ஆணையம் ஏணி சின்னம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“