சென்னை திருவேற்காடு காவல்நிலையம் முன்பு தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து திருவேற்காடு காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தீக்குளித்த பெண்:
திருவேற்காடு செந்தமிழ் நகரில் வசித்து வந்தவர் ரேணுகா. இவருக்கும், இவரின் அண்டை வீட்டுக் காரருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அண்டை வீட்டுக்காரான அமிர்தவள்ளி அளித்த புகாரின் பேரில், இரு தரப்பினரையும் திருவேற்காடு போலீசார் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தனர்.
அப்போது, போலீசார் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகக் கூறி காவல்நிலையம் முன்பாகவே, பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்ட ரேணுகா தீ வைத்துக் கொண்டார். தீயை அணைத்து அவரை மீட்ட போலீசார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று ரேணுகா உயிரிழந்தார். இதனிடையே தனது தற்கொலை முயற்சிக்கு, போலீசார் லஞ்சம் பெற்றுகொண்டு ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதே காரணம் என ரேணுகா பேசிய உரையாடலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆய்வாளர் அலெக்ஸாண்டர்
இதனைத் தொடர்ந்து, காவல்நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்யப்பட்டனர். மருத்துவமனயில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரேணுகாவிடமும் வாக்மூலம் பெற்றப்பட்டது. இதனையடுத்து திருவேற்காடு காவல் நிலையம் ஆய்வாளர் அலெக்ஸாண்டர் மற்றும் உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.