கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே உள்ள தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் அங்குள்ள ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மணோஜ்முந்தா மோனிகா தேவி ஆகியோரின் 4 வயது மகள் குடியிருப்பு முன்பு விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று திடீரென பாய்ந்து குழந்தை ரோசினியை கவ்வி தேயிலை தோட்டத்தில் சென்று மறைந்துள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த அந்த சம்பவத்தை நேரில் பார்த்த குழந்தையின் தாய் அலறியடித்து கதறி அழுதுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்களும் போலீசில் புகாரளித்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் காவல் துறையினரும் இணைந்து தேயிலைத் தோட்டத்தில் சிறுமியைத் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து வனத்துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து இரவு முதல் அதிகாலை 3 மணி வரை தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை முதல் வனத்துறை மோப்பநாய் உதவியுடனும் அதேபோல காவல் துறையினரின் மோப்ப நாய் வீரா உதவியுடனும், பணியாளர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை முதல் தேடிவந்த நிலையில், 18 மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.