கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தொண்டாமுத்தூர் சுற்றி உள்ள பல்வேறு இடங்களில் அவ்வப்போது வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிகின்றன. இந்த நிலையில், குப்பே பாளையம் பகுதியில் சக்திவேல் என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் சிறுத்தை நடமாடிய காட்சிகள், அங்கு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகி உள்ளது.
சிறுத்தை நடமாட்டம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டுள்ள நிலையில் வனத்துறையினர் பொதுமக்களின் அச்சத்தை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. வன எல்லைகளில் உலாவும் சிறுத்தைகள் ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது அப்பகுதியில் அதிகரித்துள்ளது.
அண்மையில், வால்பாறையில் சிறுமியை சிறுத்தை இழுத்துச்சென்று கொன்ற நிகழ்வு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடிய சூழலில், சிறுத்தையின் நடமாட்டம் தொடர்பான இந்த வீடியோ மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. சிறுத்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவுவதால் அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.