கோவை கண்ணப்பநகர் என்று சொன்னாலே எல்லோருக்கும் தெரிந்த ஒரே இடமாக இருப்பது கோவை சங்கனூர் பகுதியில் அமைந்துள்ள கண்ணப்ப நகர் மயானம் தான்.
இங்கு, சேவை மனிதன் பத்திரசாமியை சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.
அப்போது, மயானத்தில் சவக்குழி தோண்டும் கசப்பான மற்றும் இனிப்பான நினைவுகளை நம்மிடம் பத்ரசாமி கூறியதாவது*
என் தந்தை கிருஷ்ணன் மற்றும் என் தாயார் பழனியம்மாள் அவர்களுக்கு நான் நான்காவது மகன்.
என்னோட தாத்தா மிலிட்டரில வேலை பார்த்து ரிட்டயர்டு ஆனதும் இங்க வேலைக்கு வந்ததா சொல்றாங்க. அவருக்கு பிறகு எங்க அப்பா இந்த வேலை செய்துட்டு வந்தாரு.
பத்ரசாமியுடன் பிறந்தவர்கள் ஆறு பேர். அதில் நான் நாலாவது குழந்தையா பிறந்தேன், இப்போ வரைக்கும் குழந்தை உயரத்தில் தான் இருக்கேன்.
ஒரு அண்ணன் மன உளைச்சல்ல தற்கொலை செய்துகிட்டாரு. மீதி ரெண்டு அண்ணன்ங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு தனியா போயிட்டாங்க.
அக்காக்கு கல்யாணம் ஆயிடுச்சி. என்னுடைய தங்கச்சி தான் எங்க வம்சத்திலேயே அதிக படிப்பு படிச்சு இருக்கா. (பன்னிரண்டாவது வரை ) மற்ற யாருமே படிக்கவில்லை
.
பெரிய பெரிய படிப்பு கூட படிச்சு பரிட்சை எழுதிடலாம். ஆனா நான் மூணாவது வரைக்கும் படிக்கிறதுக்குள்ள எனக்கு நிறைய பேரு நிறைய பரீட்சை வெச்சுட்டாங்க.
அந்த வயதில் பள்ளிக்கூடம் போகும் போதெல்லாம் கூட படிக்கும் பசங்க கூளையன் வந்துட்டான்னும் குட்டையன் வந்துட்டான்னு சொல்றதும் - வெட்டியான் பையன் பக்கத்துல உட்காராதீங்கடானு ஒதுக்கி வைக்கிறதும் மிகுந்த மன உளைச்சலை பத்திர சாமிக்கு கொடுத்திருந்தது.
அப்போவே நிறைய நாள் பள்ளிக்கூடம் போகாம கட் அடிச்சுட்டு ஊர் சுத்தி இருக்கேன், அம்மாவும் அப்பாவும் எவ்வளவோ சமாதானப் படுத்தி படிக்க அனுப்புவாங்க அங்குள்ள ஆசிரியர்களே வெட்டியான் புள்ளைன்னு கூப்பிட்டு மனச காயப்படுத்த ஆரம்பிச்சதும் ஸ்கூல் புத்தகத்துக்கு எல்லாம் கொள்ளி வெச்சுட்டு இனி அந்த பக்கமே போக மாட்டேன்னு முடிவா சொல்லிட்டு ஊர் சுத்த ஆரம்பித்துவிட்டார் பத்ரசாமி.
பள்ளி பருவத்தினை கடந்து - வயதில் பெரியவனானதும் எங்க அப்பா சுடுகாட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அவருக்கு உடல்நிலை சரியில்லாத போன காரணத்தினால் அப்பாக்கு ஒத்தாசையா வேலை பார்க்க தொடங்கினேன்.
சவக்குழி தோண்டும் வேலைபாடுகளுக்கு ஒரு நாள் கூலியாக 40 வாங்குவேன். தன்னைப்போல் ஏழைகளிடம் காசு எதுவும் வாங்க மாட்டேன்.
ஒரு சிலர் பொருளாதார ரீதியில் வசதியாக உள்ளவர்கள் 500 ரூபாய் வரை தருவார்கள்.
ஊர் சுற்றுவதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்து மயானத்தில் சவக்குழி வெட்டும் வேலையில் கவனம் செலுத்தினேன்.
ஆனால் அங்கேயும் சவத்தை கொண்டு கொண்டுவரும் நபர்கள் எனக்கென வைத்திருக்கும் பெயரைத் தவிர "டேய் குட்டையா இங்க வாடான்னும் வெட்டியான் இங்க வாடான்னு வார்த்தை கடப்பாரையால் குத்திட்டு இருந்தாங்க அது இன்னும் என் மனதில் பெரிய காயத்தை ஏற்படுத்தியது.
சுயமரியாதையையும் தன்மானத்தையும் கருதி மயான வேலை வேண்டாம் என்று முடிவெடுத்த பின்பு மயானத்துல வேலை செய்யறவன்னு சொல்லாம வேலை கேட்டேன். ஆனா என்னுடைய உயரத்துக்கு எங்கேயும் யாரும் வேலை கொடுக்க முன்வரவில்லை.
அப்படி இருந்தும் ஒரு சில நல்ல உள்ளங்களால் வேலை கிடைத்தாலும் உயரம் பத்தாததால என்னால வேலை செய்ய இயலவில்லை.
மறுபடியும் தன்மானமும் சுயமரியாதையும் கிடைக்கும் என்ற எண்ணத்தில் குடும்பத்திற்காக 15 வருடங்களுக்கு மேலாக மயான வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினேன்.
மயானத்தில் வேலை செய்து கிடைக்கும் வருமானத்துல தான் எங்கள் குடும்ப பொருளாதார சிக்கல்களை சரி கட்டினேன் தற்போது இங்கே தான் ஒரு சில சந்தோஷங்களுடன் என் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார் பத்ரசாமி.
இது குறித்து அவரின் தாய் பழனியம்மாள் கூறுகையில், “குடும்பத்துல பிறந்த எல்லாரும் நார்மலான உயரம் தான் இருப்பார்கள். ஆனால் பத்ரசாமி உயரம் மட்டும் மூன்றை அடி தான்.
என் மகன் இந்த வேலையை செய்ய ஆரம்பித்து செய்ய ஆரம்பித்து 15 வருஷம் ஆகிடுச்சு மனசும் உடம்பும் நிறைய காயம் பட்டு மரத்து போச்சு.
என் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பொண்ணு பார்த்தேன் ஆனா இந்த வேலை செய்யும் எங்க குடும்பத்துக்கு நல்லது கெட்டதுக்கு கூட பத்திரிகை வைக்க மனசு வராதவங்க எப்படி பொண்ணு கொடுக்க முன் வருவாங்க என்கின்ற எண்ணம் கல்யாணம் எல்லாம் கற்பனை ஆகிவிட்டது.
இன்னைக்கு வரைக்கும் யாருமே என்னுடைய மகனின் பெயரைச் சொல்லி கூப்பிட்டதே இல்லை டேய் வெட்டியான் குட்டையான்னு வேற கூப்பிடுவாங்க.
அப்போதெல்லாம் அவனுடைய உயரம் அவனுடைய ஊனமில்லை.
கூப்பிடுபவர்கள் மனசுக்குள்ள ஊனமுள்ளது என்று நினைத்து எனக்குள்ளேயே நான் சிரித்துக் கொள்வேன்.
சவத்தை எடுத்துக்கொண்டு வரும் தெரியாதவர்கள் ஆகட்டும் சொந்தக்காரர்களாகட்டும் எங்கள் மனதினை காயப்படுத்தினாலும் கூட அவர்கள் மீது எந்த கோபமோ காழ்ப்புணர்ச்சியோ எங்களுக்கு வந்ததில்லை.
செய்யும் தொழிலை நாங்கள் தெய்வமா மதிச்சு எதையும் பொருட்படுத்தாமல் சவக்குழி தூண்டும் வேலைகளில் கவனத்தை செலவழித்து விடுவோம்.
மின் மயானங்கள் அதிகமாகிவிட்டதால் குழி தோண்டக்கூடிய வேலைகள் கம்மியாகிவிட்டது அதுமட்டுமில்லாத மழைக்காலங்களிலும் எங்களால் குழி தோண்டும் வேலையை செய்ய முடியாத நேரங்களில் எங்களின் பொருளாதாரங்களை சிக்கல்களை சரி செய்ய நாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்று அப்பணத்தினை எடுத்துக் கொள்வோம் எனத் தெரிவித்தார்.
என் மகனின் உயரம் மூன்றடி தான். ஆனால் ஆறடி தோண்டி மயானை சேவை செய்வது ஒரு வகையான ஆறுதலை என் மனதிற்கு தருகிறது என்கின்றார் பத்திரசாமியின் தாயார் பழனியம்மாள்.
ஆர்வமா படிக்க நினைத்த ஆசையை - உயரத்தை வைத்து பாடாப்படுத்திய சமுதாயத்தைக் கடந்து தனக்கு வேண்டிய பாதையில் நோக்கி சென்றாலும் பத்ரசாமி விரும்புவது பணத்தையோ பிணத்தையோ அல்ல தன்னை சுயமரியாதையுடன் ஒரு மனிதனாக நடத்த வேண்டும் என்பது மட்டுமே.
செய்தியாளர் பி. ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.