பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39 காசுக்கும் விற்பனையாகிறது.
விஜயகாந்த் நினைவு தினம்: மறைந்த தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Dec 28, 2024 21:28 ISTஐயப்ப பக்தர்களுக்காக பம்பையில் ஸ்பாட் புக்கிங் கவுண்டர்கள் அதிகரிப்பு
கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் தேவஸ்வம் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், சபரிமலை பக்தர்களுக்காக பம்பையில் ஸ்பாட் புக்கிங் கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
-
Dec 28, 2024 21:27 ISTகஜகஸ்தானில் விமான விபத்து: மன்னிப்பு கேட்டார் ரஷ்ய அதிபர் புதின்
கடந்த டிசம்பர் 25-ல் அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து ரஷ்யா சென்ற விமானம் கஜகஸ்தானின் அக்டாவ் நகரில் விழுந்து நொறுங்கியதில் 38 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து ரஷ்ய அதிபர் புதின் மன்னிப்பு கேட்டுள்ளார்.
-
Dec 28, 2024 20:40 ISTகிரிக்கெட் வீரர் நித்தீஷ் ரெட்டிக்கு ரூ25 லட்சம் பரிசு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் நித்தீஷ் ரெட்டிக்கு, ஆந்திர கிரிக்கெட் வாரியம் ரூ25 லட்சம் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.
-
Dec 28, 2024 20:39 ISTகேரளாவில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்த சுரேஷ் ரெய்னா
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது மனைவி பிரியங்காவுடன், கேரளா பத்மநாப சாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவையில் வீரேந்திர சேவாக், பட்டீசுவரர் கோயிலில் சாமி தரிசனம் செய்திருந்தார்.
-
Dec 28, 2024 20:33 ISTஜனவரி 9-முதல் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்
பொங்கல் பண்டிகைக்கான பரிசுத்தொகுப்பை அறிவித்துள்ள தமிழக அரசு, இதற்கான டோக்கன் ஜனவரி 9ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது, பொங்கல் பண்டிகைக்கு முன்பு பரிசுத்தொகுப்பினை வழங்கிடும் வகையில் டோக்கனில் தேதியை குறிப்பிட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
-
Dec 28, 2024 20:31 ISTபுத்தாண்டு கொண்டாட்டம்: காவல்துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிப்பு
புத்தாண்டு தினம் நெருங்கி வரும் நிலையில், வரும் 31ம் தேதி மற்றும் ஜன1ம் தேதி கடலில் குளிக்கவோ, இறங்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வழக்குப்பதிவு செய்தால் பாஸ்போர்ட் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு சோதனை மேற்கொள்ளும் போது சிக்கல் ஏற்படும். புத்தாண்டை எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் மகிழ்ச்சியாக பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.
-
Dec 28, 2024 19:39 ISTகோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சேவாக் சாமி தரிசனம்!
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக், கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
Dec 28, 2024 19:38 ISTகட்சி பாகுபாடின்றி நினைவஞ்சலியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி: பிரேமலதா விஜயகாந்த்!
“மக்களுக்காக வாழ்ந்தவர் விஜயகாந்த். என்றும் அவர் நினைவைப் போற்றுவோம். கட்சி பாகுபாடின்றி முதலாம் ஆண்டு நினைவஞ்சலியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
Dec 28, 2024 19:37 ISTமன்மோகன் சிங்கின் நினைவை மக்களின் மனதில் இருந்து அழிக்கும் முயற்சி: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் குடும்பத்தினரின் கோரிக்கை நிராகரித்து, அவருக்கு பொருத்தமான இடத்தில், இறுதிச்சடங்கு, அனுமதிக்காதது, ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தையே அவமதிப்பதாகும், இது ஆணவனம், ஒருதலைபட்சமான போக்கு, மன்மோகன் சிங்கின் நினைவை மக்களின் மனதில் இருந்து அழிக்கும் முயற்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
Dec 28, 2024 19:32 ISTஅன்புமணியிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்த பாமக குழு அமைப்பு
சமரச பேச்சுவார்த்தை நடத்த குழு பாமக தலைவர் அன்புமணியிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்த ஜி.கே.மணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கருத்து மோதல் தொடர்பாக, தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன், மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
-
Dec 28, 2024 19:30 ISTபொங்கல் பண்டிகை பரிசு பொருட்களை அறிவித்த மு.க.ஸ்டாலின்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
Dec 28, 2024 18:54 ISTமாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் அச்சமடைய வேண்டாம்: ஆளுனர் ஆர்.என்.ரவி
கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழத்தில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இச்சம்பவம் குறித்து அச்சமடைய வேண்டாம் என்று, அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று மேற்கொண்ட ஆய்வு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் அண்ணா பல்கலைகழகம் மாணவர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று நிர்வாகத்திற்கு ஆளுனர் உத்தரவிட்டுள்ளார்.
செய்தி வெளியீடு எண்: 55 #அண்ணாபல்கலைக்கழகம் #ஆளுநர்ரவி pic.twitter.com/oMMWwaL9Uc
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 28, 2024 -
Dec 28, 2024 18:51 ISTதமிழக செஸ் வீரர் குகேஷ்க்கு பிரதமர் மோடி பாராட்டு
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற, தமிழக செஸ் வீரர் குகேஷை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் பிரதமர் மோடி
-
Dec 28, 2024 17:00 ISTபால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை
பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பாக கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பசும்பாலுக்கு ரூ. 10 உயர்த்தி லிட்டருக்கு ரூ. 45 வழங்க வேண்டும் எனவும், எருமை பாலுக்கு ரூ. 10 உயர்த்தி லிட்டருக்கு ரூ. 54 ஆக தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Dec 28, 2024 16:48 IST4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 28, 2024 16:21 ISTயாருக்கும் உரிமை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்
எப்படி வாழ வேண்டும் என பெண்களுக்கு கட்டளையிட யாருக்கும் உரிமை இல்லை எனவும், இது அவர்களது வாழ்க்கை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில், பெண்களின் உரிமை குறித்து இந்த சமுதாயம் எப்படி கட்டளையிட முடியும் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
Dec 28, 2024 15:59 ISTஅரசு மதுபான கடைக்கு தடை
தேனி மாவட்டம், பூதிபுரத்தில் டாஸ்மாக் கடை திறக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது. "குடி, குடியை கெடுக்கும் என்று டிவியில் அரசு விளம்பரம் செய்வதில் என்ன பயன் உள்ளது? இருக்கும் மதுக்கடைகளை குறைக்க வழிபாருங்கள். மூலைமுடுக்கெல்லாம் மதுக்கடைகள் உள்ளன. இதை அதிகரிப்பதால் என்ன பயன்?" என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
Dec 28, 2024 15:44 ISTபெண்கள் மீது அக்கறை இருக்கிறது - கனிமொழி
பெண்கள் மீது முதலமைச்சருக்கும், ஆட்சிக்கும் மிகப்பெரிய அக்கறை இருக்கிறது என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Dec 28, 2024 15:37 ISTமின்கட்டணத்தை குறைக்க வேண்டும் - பா.ம.க
தமிழகத்தில் மூன்று முறை உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பா.ம.க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரண தொகையை உடனடியாக தர வேண்டும் எனவும், டங்கஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
Dec 28, 2024 15:00 ISTஇன்றைக்குள் எல்லாம் சரியாகிவிடும் - பா.ம.க எம்.எல்.ஏ. அருள்
பா.ம.க பொதுக்குழுவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் வெளிப்பட்டது சலசலப்பு தான் என்றும், இன்றைக்குள் எல்லாம் சரியாகி விடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Dec 28, 2024 14:40 ISTராமதாஸ் - அன்புமணி இடையே காரசார மோதல்
பா.ம.க பொதுக்குழுவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே காரசார மோதல் ஏற்பட்டது. பா.ம.க இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனம் என ராமதாஸ் அறிவித்ததற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
"கட்சியை உருவாக்கியவன் நான்; வன்னியர் சங்கத்தை உருவாக்கியவன் நான்; முடிவை நான் தான் எடுப்பேன்" என அன்புமணியிடம் ராமதாஸ் காட்டமாக கூறினார். "பனையூரில் புதிதாக கட்டியுள்ள எனது அலுவலகத்தில் இனி தொண்டர்கள் என்னை சந்திக்கலாம்" என அன்புமணி தெரிவித்தார். மேலும், கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே பொறுப்புகள் வழங்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து, விருப்பம் இல்லாதவர்கள் கட்சியில் இருந்து வெளியேறலாம் என ராமதாஸ் கூறினார். -
Dec 28, 2024 14:09 ISTஅண்ணா பல்கலை. மாணவர்களிடம் ஆளுநர் கருத்துக்கேட்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில், ஆய்வு மேற்கொண்டு வருகிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. மாணவி பாலியல் விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாணவ, மாணவிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
-
Dec 28, 2024 14:06 ISTவிஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதி மறுப்பு
சென்னை, மீனம்பாக்கத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் 20 ஆயிரம் பேர் கூடினால் பாதிப்புகள் ஏற்படும் எனவும், உரிய வசதிகள் செய்ய முடியாது எனவும் காவல்துறை விளக்கமளித்துள்ளது.
-
Dec 28, 2024 13:42 ISTசிறப்பு விசாரணை குழு அமைப்பு - உயர்நீதிமன்றம்
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரத்தில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆவடி துணை ஆணையர் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அண்ணா பல்கலைக் கழக பாதுகாப்பை மேம்படுத்தவும் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்தது.
-
Dec 28, 2024 13:30 ISTஅண்ணா பல்கலை. வன்கொடுமை - பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; ஐகோர்ட் உத்தரவு
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்விக் கட்டணம் உள்ளிட்ட எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. பாதிக்கப்பட்ட மாணவி தொடர்ந்து படிப்பை முடிக்க அனுமதிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் போதிய பாதுகாப்பு வழங்க டி.ஜி.பி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
Dec 28, 2024 13:26 ISTவிஜயகாந்த் நினைவிடத்தில் விஜய் ரசிகர்கள் அஞ்சலி
விஜயகாந்த் நினைவிடத்தில் விஜயகாந்த் மற்றும் விஜய் புகைப்படங்களுடன் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
-
Dec 28, 2024 13:22 ISTஅண்ணா பல்கலை மாணவி வழக்கு; விசாரிக்க 3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமனம்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை விசாரிக்க 3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் குழுவை அமைத்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
Dec 28, 2024 12:57 ISTமானம் காத்த மகன் - தந்தை ஆனந்த கண்ணீர்
இக்கட்டான நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட் சதமடித்து இந்தியாவை காப்பாற்றினார் நிதிஷ்குமார் ரெட்டி. தந்தை ஆனந்த கண்ணீர் விட்டதை பார்த்து மெல்பர்ன் மைதானத்தில் திரண்ட ரசிகர்கள் நெகிழ்ந்தனர்.
-
Dec 28, 2024 12:38 ISTஒரே வயிற்றில் பிறந்த சொந்த தம்பியை போல நினைத்து பேசக்கூடியவர் - ஈஸ்வரன் பேச்சு
கொங்கு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் செய்தியாளர் சந்திப்பில், "நடிகர் என்பதை தாண்டி ஒரு நல்ல மனிதராக தம்பிகள் அனைவருக்கும் அண்ணனாக மிக பாசத்தோடு வாழ்ந்தவர், அப்படிப்பட்ட ஒரு தலைவருக்கு தமிழக மக்கள் மத்தியில் இருக்கின்ற அந்த பாச உணர்வு எந்த விதத்திலும் குறை இல்லாமல் தொடர்ந்து அவர் மீது அன்பு செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்..
2014 நாடாளுமன்ற தேர்தலின் போது நான் அவரோடு அதிகமாக பழகி இருக்கிறேன், எங்கள் கட்சி பிரச்சாரத்திற்கு கொங்கு மண்டலத்திற்கு வருகை புரிந்திருக்கிறார். ஒரே வயிற்றில் பிறந்த சொந்த தம்பியை போல நினைத்து பேசக்கூடியவர் பழகக் கூடியவர் அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதர் நம்மை விட்டு பிரிந்து ஓராண்டு ஆகியும் தேமுதிக தொண்டர்கள் மத்தியிலும் தமிழக மக்கள் மத்தியிலும் அவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விஜயகாந்த் அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவருடைய புகழ் தமிழக மக்கள் மத்தியில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கும்." என்று அவர் கூறினார்.
-
Dec 28, 2024 12:36 ISTசவுதி அரேபியாவில் ஆலங்கட்டி மழை
வெயில் வாட்டி வதைக்க அனல் பறக்கும் அரபு தேசத்தில் ஆலங்கட்டி மழை பொழிந்துள்ளது. திடீர் மழையால் மெக்கா மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்கள்
-
Dec 28, 2024 12:27 ISTமாணவி பாலியல் விவகாரம் - உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கம்
“யாரையும் காவல்துறை பாதுகாக்கவில்லை என்பதை மாணவர்களுக்கு தெரிவிக்கவே காவல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார். இதுவரை நடந்த விசாரணையின் அடிப்படையில் மட்டுமே ஒருவர் குற்றவாளி என தெரியவந்துள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்தார்.
ஒருவர் மட்டுமே குற்றவாளி என காவல் ஆணையர் முடிவுக்கு வரவில்லை. குற்றவாளி வேறு செல்போன் வைத்திருந்தாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது" என்று உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.
-
Dec 28, 2024 12:13 ISTமாணவி பாலியல் விவகாரம் - காவல்துறை விளக்கம்
"காவல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பை நடத்த முடியும் அலுவல் ரீதியாக செய்தியாளர்களை சந்திக்கலாம், தனிப்பட்ட முறையில் தான் செய்தியாளர்களை சந்திக்க முடியாது. பணி விதிகள் படி, அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திக்க அரசு அனுமதி தேவையில்லை" என்று உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.
-
Dec 28, 2024 11:01 ISTநினைவு பேரணி - எல்.கே.சுதீஷ் கேள்வி
திமுக, அதிமுகவிற்கு அனுமதி தரும்போது தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்தின் நினைவு பேரணிக்கு அனுமதி மறுப்பது ஏன்? என எல்.கே.சுதீஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
Dec 28, 2024 10:54 ISTவிஜயகாந்துக்கு சீமான் புகழாரம்
“விஜயகாந்தால் வாழ்ந்தவர்கள் ஏராளம் வீழ்ந்தவர்கள் யாருமில்லை, இரு பெரும் ஆளுமைகள் இருந்தபோதே கட்சி துவங்கியவர் தன்னைத் தானே செதுக்கி வளர்த்துக் கொண்டு, எல்லோராலும் நேசிக்கப்படுபவர் கேப்டன் விஜயகாந்த்” என்று அஞ்சலி செலுத்திய பின் நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறினார்.
-
Dec 28, 2024 10:52 ISTவிஜயகாந்த் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார்.
-
Dec 28, 2024 10:34 ISTஅண்ணாமலை சாட்டையடி - அன்புமணி விமர்சனம்
"மக்களின் கவனத்தையும், ஊடக கவனத்தையும் ஈர்ப்பதற்காக அண்ணாமலை சாட்டையால் அடித்து போராட்டம் செய்திருக்கலாம்" என அண்ணாமலை சாட்டையடி குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
-
Dec 28, 2024 10:32 ISTகேப்டனுக்கு நடிகர் சரத்குமார் அஞ்சலி
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனரும், அருமை நண்பருமான கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் முதலாமாண்டு நினைவுநாளில் இதய அஞ்சலி செலுத்துவதாக நடிகர் சரத்குமார் பதிவிட்டுள்ளார்.
-
Dec 28, 2024 10:11 ISTதமிழக மக்களின் பேரன்பைப் பெற்றவர் விஜயகாந்த் - எடப்பாடி பழனிசாமி
"தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த அடையாளம் கொண்டு கோலோச்சியவரும், தனது உயரிய மனிதநேயப் பண்புகளாலும், ஈகைப் பெருங்குணத்தாலும் தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றவருமான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், அன்புச் சகோதரர், பத்ம பூஷன் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் நினைவு நாளான இன்று, அவரின் பொதுவாழ்வின் சாதனைகளை நினைவுகூர்கிறேன்" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
-
Dec 28, 2024 09:58 ISTகண்ணீர் மல்க பிரேமலதா மரியாதை
தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார். எல்.கே.சுதீஷ், விஜயபாஸ்கர், சண்முக பாண்டியன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
-
Dec 28, 2024 09:49 ISTவிஜயகாந்த் நினைவிடத்தில் எம். எஸ். பாஸ்கர் மலர் தூவி மரியாதை
சென்னை, கோயம்பேட்டில் விஜயகாந்த் நினைவிடத்தில் எம். எஸ். பாஸ்கர் மலர் தூவி மரியாதை செய்தார்.
-
Dec 28, 2024 09:45 ISTவிஜயகாந்த் குருபூஜையில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்பு
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் குருபூஜையில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கிறார்.
-
Dec 28, 2024 09:34 ISTகேப்டன் பற்றிய சீமான் பேச்சு
விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சீமான், "இன்னும் 10 ஆண்டுகள் விஜயகாந்த் இருந்திருந்தால் தமிழகத்தில் மாற்று அரசியலை உருவாக்கி இருப்பார்" என்று நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
-
Dec 28, 2024 09:32 ISTவிஜயகாந்த் நினைவிடத்தில் சீமான் மரியாதை
சென்னை, கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-
Dec 28, 2024 09:24 ISTவிஜயகாந்த் நினைவிடத்தில் பன்னீர் செல்வம் அஞ்சலி
"விஜயகாந்தின் வரலாறு என்றென்றும் நிலைத்திருக்கும் என்று விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
Dec 28, 2024 09:23 ISTபெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன் - கமல்ஹாசன்
அன்பு நண்பா தேமுதிக நிறுவனர், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைந்து ஓராண்டாகிறது. அவரது இழப்பை மக்களின் மனம் ஏற்க மறுக்கும் அளவிற்கு பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார். வறியோருக்கு உதவும் ஈகை, எளியோரின் பக்கம் நிற்கும் நேர்மை, மனதில் பட்டதைப் பேசும் துணிச்சல் ஆகிய அவரது பண்புகள் தமிழ் மனங்களில் எப்போதும் பசுமையாக நிலைத்திருக்கும் என ம.நீ.ம தலைவர் கமல்ஹாரன் பதிவிட்டுள்ளார்.
-
Dec 28, 2024 09:07 ISTசென்னை கோயம்பேட்டில் காவல்துறை அனுமதி மறுத்ததை மீறி தேமுதிகவினர் பேரணி
சென்னை கோயம்பேட்டில் காவல்துறை அனுமதி மறுத்ததை மீறி தேமுதிகவினர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து நினைவிடம் நோக்கி பேரணி நடைபெறுகிறது.
-
Dec 28, 2024 09:00 ISTபட்ஜெட்டில் வருமான வரி குறைக்கப்பட வாய்ப்பு!
இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரியை குறைக்க வரும் மத்திய பட்ஜெட்டில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வரி குறைப்பு திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் லட்சக்கணக்கான நடுத்தர மக்களுக்கு இது பலன் அளிக்கும் என்றும் குறிப்பாக நகர்புறங்களில் அதிக வாழ்க்கை செலவினங்களை எதிர்கொண்டு வருபவர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
-
Dec 28, 2024 08:55 ISTகலைய மறுக்கும் தேமுதிகவினர்
கேப்டன் விஜயகாந்த் நினைவு தினத்தை முன்னிட்டு பேரணி செல்வதற்காக கோயம்பேடு மாநில தேர்தல் ஆணையம் முன்பு குவிந்துள்ள தொண்டர்கள் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் அங்கிருந்து கலைய மறுக்கின்றனர்.
-
Dec 28, 2024 08:52 IST"மன்மோகன் சிங்குக்கு நினைவக இடம் ஒதுக்கப்படும்" - மத்திய அரசு
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அறக்கட்டளை அமைக்கப்பட்ட பிறகு நினைவிடத்திற்கான இடம் ஒதுக்க முடியும் என்றும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு கார்கே, மன்மோகன் சிங் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது.மன்மோகன் சிங் நினைவகம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதிய நிலையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
Dec 28, 2024 08:28 ISTவிஜயகாந்த் நினைவு தின பேரணி - ஸ்டாலின் அனுமதி வழங்க தே.மு.தி.க கோரிக்கை
தே.மு.தி.க துணைச் செயலாளர் பார்த்தசாரதி, ''மாவட்டச் செயலாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நினைவு நாளை குருபூஜையாக கொண்டாட வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் இன்று குருபூஜை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றோம். அதற்கு முறையாக தேர்தல் ஆணையத்தில் இருந்து பேரணியாக வருவதற்கு நாங்கள் அனுமதி கேட்டு இருந்தோம். நாங்கள் கடிதம் கொடுத்தது 5/12/2024. ஆனால் எங்களுக்கு மறுப்புச் செய்தி கொடுத்தது நேற்று மாலை 4 மணிக்கு.
நாங்கள் கொடுத்த கடிதத்திற்கு பிறகு ஐந்து நாட்கள் ஆறு நாட்களில் பதில் கொடுத்திருந்தால் நாங்கள் நீதிமன்றத்தை அணுகி இந்த பேரணிக்கு அனுமதி பெற்றிருப்போம். வேண்டுமென்றே திட்டமிட்டு காவல்துறை நேற்று எங்களிடத்தில் அனுமதி மறுப்பு என்ற செய்தி கொடுத்து இருக்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசியல் வரலாற்றில் மறைந்த அண்ணா, எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா அவர்களுக்கெல்லாம் நினைவு நாள் வந்தாலும் பிறந்தநாள் வந்தாலும் மெரினா பீச்சில் பேரணியாக நடப்பார்கள். இப்பொழுது எங்களுடைய பேரணியும் 500 லிருந்து 800 மீட்டர் தான். இதற்கு அனுமதி கொடுத்திருக்கலாம். அரசியல் காழ்ப்புணர்ச்சியா அல்லது காவல்துறையின் காழ்ப்புணர்ச்சியா என்று தெரியாது. ஒரு நல்ல மனிதர் நாட்டுக்காக வாழ்ந்த மனிதர்;எத்தனையோ குடும்பங்களை வாழ வைத்த மனிதர் எத்தனையோ தான தர்மங்களை செய்து மனிதர்; தமிழ்நாடு மட்டுமல்ல இலங்கையில் பாதிக்கப்பட்டாலும் குஜராத்தில் பாதிக்கப்பட்டாலும் ஆந்திராவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டாலும் ராணுவ வீரர் காயம் அடைந்தாலும் முதலில் நிதியைக் கொடுத்த தலைவர் விஜயகாந்த் தான். அப்படிப்பட்ட நல்ல மனிதனுக்கு இன்று காவல்துறை பேரணி நடத்த அனுமதி மறுத்து இருக்கிறது. இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. இந்த செய்தியைப் பார்த்து முதல்வர் மாநகர ஆணையருக்கு இங்கிருக்கின்ற டிசிக்கும் உத்தரவை போட்டு பேரணியை அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்று அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.