தமிழகத்தில் நடைபெறுகிற இந்த முருக பக்தர்களின் மாநாடு ஒரு மிகப்பெரிய எழுச்சியை கொடுக்கின்ற மாநாடாக இருக்கும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் இன்று (ஜூன் 22) இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ள நிலையில் தினமும் மதுரை மட்டுமல்லாது அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் முருகபக்தர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்ிலையில் முருகபக்தர்கள் மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்த மத்திய இணையமைச்சர் எல் முருகன் அங்கு முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் தரிசனம் செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முருக பக்தர்கள் மாநாட்டிற்கு உலகம் முழுவதும் இருக்கிற முருக பக்தர்கள் இங்கு வர உள்ளனர் என்றும் இன்று (22.06.25) மாலை 6 மணிக்கு மாநாடு நடைபெறும் இடத்தில் லட்சக்கணக்கானோர் ஒன்று கூடி கந்த சக்ஷடி கவசம் பாட உள்ளனர் என்றார்.
அதேபோன்று மாநாடு நடைபெறும் இடத்திற்கு வர இயலாதவர்கள் அனைவரும், அவர்களின் வீடுகளில் இருந்து அதே நேரத்தில் கந்த சக்ஷ்டி பாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றும் அவர்களும் தானாக முன்வந்து கந்த சக்ஷ்டி கவசத்தை பாடுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும், தமிழகத்தில் நடைபெறுகிற இந்த ஆன்மீக மாநாடு, முருக பக்தர்களின் மாநாடு, ஒரு மிகப்பெரிய எழுச்சியை கொடுக்கின்ற மாநாடாக இந்த மாநாடு இருக்கும் என்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.