/indian-express-tamil/media/media_files/2025/10/18/yawn-jaw-stuck-2025-10-18-20-35-54.jpg)
கொட்டாவியால் தாடை விலகிய ரயில் பயணி... உடனடியாக சரிசெய்த ரயில்வே மருத்துவர்!
கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் செல்லும் திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஒருவருக்கு, நள்ளிரவில் கொட்டாவி விட்டபோது அவரது தாடை எலும்புகள் சிக்கிக் கொண்டதால், வாயை மூட முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, பாலக்காடு ரயில்வே மருத்துவ அதிகாரி அவசர சிகிச்சை அளித்து அவரைச் சரிசெய்தார்.
கன்னியாகுமரியில் இருந்து திப்ருகர் நோக்கிச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பயணி நேற்று இரவு பயணம் மேற்கொண்டிருந்தார். ரயில் பாலக்காடு அருகே வந்தபோது, இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில், அவர் கொட்டாவி விட்டபோது எதிர்பாராதவிதமாக அவரது தாடை எலும்புகள் சிக்கிக்கொண்டன. இதனால் அவரால் வாயை மூட முடியவில்லை. இதனைக் கண்ட சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ரயில்வே ஊழியர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் உடனடியாகப் பாலக்காடு ரயில்வே கோட்ட மருத்துவ அதிகாரிக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலைப் பெற்ற ரயில்வே மருத்துவ அதிகாரி ஜிதன் பி.எஸ்., அதிகாலையில் பாலக்காடு ரயில் நிலையத்திற்கு வந்து, வாயை மூட முடியாமல் தவித்த அந்தப் பயணிக்குப் பதற்றமின்றி விரைந்து சிகிச்சை அளித்தார். தாடை எலும்புகளைச் சரிசெய்து, பயணிக்கு மீண்டும் வாயை மூட உதவினார்.
மருத்துவ அதிகாரியின் துரித நடவடிக்கையால் இயல்பு நிலைக்குத் திரும்பிய அந்தப் பயணி, பின்னர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். கொட்டாவி விட்டதால் வாய் மூட முடியாமல் போன இந்தச் சம்பவம் சக பயணிகளிடையே சிறிது நேரம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.