சென்னை தாம்பரம் அருகே உள்ள அகரம் தென்பகுதியில் குடும்பத்தினருடன் வசித்துவந்தவர் எஸ்தர். பெண் மதபோதகரான இவர், கடந்த மே மாதம் மாயமானார்.
இது குறித்து அவரது மகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான எஸ்தர்-ஐ தேடிவந்தனர்.
இந்த நிலையில், ஜூன் மாதம் மதுரப் பாக்கம் கோவிலாஞ்சேரி காட்டுப்பகுதியில் பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இது மாயமான பெண் மத போதகர் எஸ்தரின் உடல் என்பது தெரியவந்தது. அவரது மகளும் இது எஸ்தரின் உடல்தான் என அடையாளம் காட்டினார்.
எனினும் எஸ்தரின் சாவுக்கான காரணம் குறித்தும் அவரை கொலை செய்த நபர் குறித்தும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இந்த வழக்கில் தடயங்கள் எதுவும் இல்லாத வகையில் செல்போன் இ.எம்.இ.ஐ எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தொடர்ந்தனர்.
இந்த நிலையில், லோகநாதன் என்பவர் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சம்பவத்தன்று எஸ்தர் தனியாக நின்றதாகவும், அவரிடம் மது குடிக்க பணம் கேட்டதாகவும், அவர் கொடுக்காததால் அவரை கழுத்தை நெறித்து கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொடர்ந்து, எஸ்தரின் செல்போன் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார். இந்நிலையில் செல்போன் இ.எம்.இ.ஐ எண்ணால் அவர் போலீசாரிடம் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/