டீசல் விலை உயர்வைக் கண்டித்து லாரி உரிமையாளர் சங்கத்தினர் நாடு முழுவதும் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
சமீபக் காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் பல நட்டங்களை சந்தித்து வருவதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்து வந்தனர். இத்துடன் சுங்கச் சாவடி கட்டணம் மற்றும் காப்பீடுத் தொகையும் உயர்ந்துள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிப்படைந்து வருவதாக கூறுகின்றனர்.
இந்நிலையில், டீசல் விலை உயர்வு மற்றும் சுங்க கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், டீசலை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டுவர வலியுறுத்தியும், அகில இந்திய சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் இந்தப் போராட்டத்திலிருந்து அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கபோவதில்லை என அறிவித்துள்ளது.