/indian-express-tamil/media/media_files/2025/09/19/police-arrest-lottery-seller-2025-09-19-22-18-03.jpg)
அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான தனிப்படையினர், பிரபல லாட்டரி வியாபாரியான ஷம்முபாய் (எ) நசீரை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில், பிரபல லாட்டரி வியாபாரியை குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார், கிளை சிறைச்சாலையில் இருந்து ஊர்வலமாக அழைத்து சென்று மத்திய சிறையில் அடைத்தது லாட்டரி வியாபாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிதம்பரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஐ.ஜி அஷ்ரா கார்க் உத்தரவின் பேரில், பண்ருட்டி டி.எஸ்.பி. ராஜா மற்றும் அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான தனிப்படையினர், பிரபல லாட்டரி வியாபாரியான ஷம்முபாய் (எ) நசீரை (54) கைது செய்தனர்.
இதையடுத்து, விசாரணையில், லாட்டரி வியாபாரிக்கு ஆதரவாக செயல்பட்ட, நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் என 6 போலீசார் கூட்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து 10 க்கும் மேற்பட்ட லாட்டரி வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், லாட்டரி வியாபாரத்தில் கோலோச்சி வந்த முக்கிய வியாபாரி, சம்முபாய் (எ) நசீரை, சிதம்பரம் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, சிதம்பரத்தில் உள்ள லாட்டரி வியாபாரிகளுக்கு, போலீசாரின் அதிரடி நடவடிக்கை தெரியும் வகையிலும், லாட்டரி தொழிலில் யாரும் இனி ஈடுபடக்கூடாது என்ற அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், குண்டர் சட்டத்தில் கைது செய்த நசீரை, மேலவீதியில் உள்ள நகர காவல் நிலையத்தில் இருந்து, இரு போலீசார், பாதுகாப்புடன் நடக்க வைத்து ஊர்வலமாக அழைத்து சென்று, கஞ்சித்தொட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து, பஸ்சில் ஏற்றி கடலுார் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர். பின்பு கடலூர் மத்திய சிறையில் அவரை அடைத்தனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.