/indian-express-tamil/media/media_files/2024/11/09/RPcFvUNo7ETJBcrbOZ6A.jpg)
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து வரும் ஈரப்பத காற்று, வட இந்திய பகுதிகளில் இருந்து வீசும் வறண்ட காற்று ஆகியவற்றால் ஏற்படும் காற்று குவிதலால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த சூழலில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருந்த நிலையில் மியானமர் கடலோரப் பகுதியில் நிலவிய காற்று சுழற்சியால் வடகிழக்கு காற்றின் வருகை தடைப்பட்டு, தாழ்வுப்பகுதி உருவாவது தள்ளிப்போனது. இதற்கிடையே மியானமர் கடலோரப் பகுதியில் நிலவி வந்த காற்று சுழற்சியினால் வலு இழந்து, நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிலும், வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரையிலும் தெற்கு, உள் மாவட்டங்கள் உள்ளிட்ட பிற பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரையிலும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.