தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என்றும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது மேலும் சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், மேகங்கள் சென்னையை நோக்கி வருவதால் விட்டுவிட்டு மழை தொடரும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "தென் தமிழகத்தில் இன்று இரவு முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அரபிக்கடலுக்கு சென்றபிறகு மழை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையில் பெரும்பாலான இடங்களில் 70 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
காற்றழுத்தத் தாழ்வு நிலையால் சென்னைக்கு மேகக் கூட்டங்கள் நகர்ந்து வருவதால் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
சென்னை முழுவதும் காலை 8.30 மணிக்கு முன்னதாகவே நல்ல மழை பெய்துள்ளது, அடுத்து மேகக்கூட்டங்கள் நகர உள்ளதால் அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளதால் அலுவலகம் செல்லும் போது மழை பெய்யக்கூடும் எனவே ரெயின்கோட்களுடன் தயாராக செல்லுங்கள்.
டெல்டா பகுதியில் கனமழை பெய்து வருகிறது. தற்போது மன்னார் வளைகுடா வழியாக நெல்லை வழியாக கேரளாவை நோக்கி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பருவமழை பெய்த தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய பகுதிகளில் மட்டும் இன்றும், நாளையும் கனமழை பெய்யும்” என்றும் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“