/indian-express-tamil/media/media_files/2025/10/01/rain-tamil-nadu-2-2025-10-01-20-21-29.jpg)
மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, நாகை, கடலூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது, பின்னர், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும் என்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் நாட்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, நாகை, கடலூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
நேற்று (செப். 30, 2025) மாலை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை (அக். 01, 2025) 08:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நீடிக்கிறது.
இது மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
பின்னர், இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அக்டோபர் 3-ஆம் தேதி காலை தெற்கு ஒரிசா - வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு (அக்டோபர் 1 முதல் 4 வரை)
கனமழை எச்சரிக்கை உள்ள மாவட்டங்கள்
01-10-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
02-10-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
03-10-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
04-10-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 5 முதல் 7 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை தொடரும் என்று வானிலை ஆய்வ மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வரும் நாட்களில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மேற்கண்ட நாட்களில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அக்டோபர் 1 முதல் 3 வரை: தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடைஇடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகளில்: அக்டோபர் 1 முதல் 3 வரை மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, நாகை, கடலூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.