தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரே தொகுதியிலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதே தி.மு.க.,வின் முதல் இலக்கு என்று அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
அடுத்த இலக்கு, சமூக நீதி மற்றும் கூட்டாட்சி கொள்கைகளுக்கு அர்ப்பணிப்புடன் கூடிய புதிய அரசாங்கத்தை மத்தியில் அமைப்பதே என்றும் ஸ்டாலின் கூறினார்.
இதையும் படியுங்கள்: ஈஷா, காருண்யாவுக்கு எதிராக கோவையில் ஆர்ப்பாட்டம்: அணிவகுத்த சர்வ கட்சிகள்
“லோக்சபா தேர்தலின் போது (2024ல்) அதை இலக்காகக் கொண்டு அரசியல் நடவடிக்கைகளை எடுப்போம்,” என்று ஸ்டாலின் வீடியோ செய்தியில் தெரிவித்தார். "உங்களில் ஒருவன் பதில்கள்" என்ற தலைப்பில் வீடியோ-செய்தித் தொடரின் மூலம் தி.மு.க.,வின் மக்களைச் சென்றடையும் முயற்சியின் முதல் பதிப்பு இது.
“நாற்பதும் நமதே, நாடும் நமதே” என்ற அரசியல் முழக்கத்துடன் தி.மு.க. களமிறங்கியுள்ளது. திராவிட சித்தாந்தம், திராவிட மாடல் ஆட்சி, நிர்வாகம் போன்ற விஷயங்களில் சமூக வலைதளங்களில் மக்களிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதே இந்த அவுட்ரீச் திட்டத்தின் நோக்கமாகும் என தி.மு.க. கூறியுள்ளது. கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்று ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். "தாமதமாக இருப்பதால் அது நடக்காது என்ற முடிவுக்கு வர வேண்டாம்." நீட்-அநீதிக்காக பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசை கடுமையாக சாடிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலில் காவி கட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.
பா.ஜ.க தனது ஆளுநர்கள் மூலம் "இணை ஆட்சியை" நடத்த முயற்சிக்கிறது என்ற கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், "இந்த பிரச்சினையை எதிர்கொண்டு நாங்கள் அரசாங்கத்தை நடத்துகிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கும், ஆளுநருக்கும் உள்ள பொறுப்புகளை நமது அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக வகுத்துள்ளது. அதை அனைவரும் பின்பற்றினால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. இதனால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும். 2021ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவற்றை தி.மு.க ஆட்சி நிறைவேற்றியுள்ளது. மாநில அரசின் நிதி நிலை சிறப்பாக இருந்திருந்தால், மத்திய அரசு உரிய ஆதரவை வழங்கியிருந்தால், தி.மு.க ஆட்சியில் மேலும் பல நலத்திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கும் என்று ஸ்டாலின் கூறினார்.
சமீபத்தில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே, 2024 மக்களவைத் தேர்தலில் கட்சி அமோக வெற்றியைப் பெற்று தேசிய அரசியலில் ஒரு அசைக்க முடியாத சக்தியாக எழுச்சி பெறச் செய்ய உறுதிமொழி எடுக்குமாறு நிர்வாகிகளை ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
பா.ஜ.க.,வுடன் தி.மு.க சமரசம் செய்து கொண்டதாகக் கூறப்படும் கருத்துக்களுக்கு பதிலளித்த ஸ்டாலின், “அத்தகைய கருத்தை பா.ஜ.க.,வே ஏற்காது” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil