சென்னை மெட்ரோ ரயில் (CMRL) நடத்திய உள் விசாரணையில், மணப்பாக்கம் அருகே இரண்டு கர்டர்கள் இடிந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்ததற்கு லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனம் பொறுப்பேற்றதை அடுத்து, அந்நிறுவனத்திற்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் -சோழிங்கநல்லூர் இடையே 44.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் நடந்து வருகிறது. இதில், போரூர் முதல் சென்னை வர்த்தக மையம் வரை உயர்மட்ட பாலப்பணிகள் நடக்கிறது. இந்த உயர்மட்டப் பாதையின் கீழ், 30 அடி உயரத்தில் வாகனங்கள் செல்லும் வகையில், போரூர் - நந்தம்பாக்கம் வரை இணைப்பு பாலம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்காக 2 தூண்கள் இடையே, ராட்சத கான்கிரீட் 'கர்டர்' அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி இரவு நந்தம்பாக்கத்தில், ராட்சத 'கர்டர்' திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற ரமேஷ் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் 2 தலைமை பொதுமேலாளர்கள் அடங்கிய குழு விசாரணை நடத்தியது.
விசாரணை அறிக்கையில் ஒப்பந்ததாரர் (L&T) மற்றும் பொது ஆலோசகர் (GC) ஆகிய இருவரும் இந்த சம்பவத்திற்கு முதன்மையாக பொறுப்பேற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை அடிப்படையில், எல் & டி நிறுவனத்திற்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட 4 இன்ஜினீயர்கள் மெட்ரோ திட்டப்பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
எல்&டி நிறுவனத்தின் இரண்டு முக்கிய பணியாளர்களான தலைமை பாதுகாப்பு மேலாளர் மற்றும் மூத்த பாதுகாப்பு மேலாளர் ஆகிய இருவரும் நேரடியாகப் பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதேபோல், மேற்பார்வைப் பணியில் உள்ள பொது ஆலோசகரின் கீழ் பாதுகாப்பு பொறியாளர் மற்றும் மூத்த துணை குடியிருப்பு பொறியாளர் ஆகிய இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.