வானம் பிளந்து பூமியை வெள்ளக்காடாக மாற்றிய நிலையிலும், பொறுப்பும் கடமையை ஒருபோதும் மறவேன் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குகிறார் கேரளாவில் பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த எம்.ஜி. ராஜமாணிக்கம், ஐஏஎஸ் .
எம்.ஜி. ராஜமாணிக்கம், ஐஏஎஸ்
கேரளா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. வெள்ள பாதிப்புகளுக்கு உதவும் வகையில் தமிழகத்தை சேர்ந்த பலரும் தங்களின் ஆதரவு கரங்களை நீட்டி வருகின்றனர். பல்வேறு இடங்களில் இருந்து பொருட்களாலும் நிதி மூலமாகவும் உதவிகள் பெருகும் வேளையில், எவ்வித தயக்கமுமின்றி தனது கடமையை ஆற்றியிருக்கிறார் மதுரை சேர்ந்த ராஜமாணிக்கம்.
யார் இந்த எம்.ஜி. ராஜமாணிக்கம், ஐஏஎஸ்:
மதுரை மாவட்டம், திருவாதவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.ஜி. ராஜமாணிக்கம், ஐஏஎஸ். திருச்சி மாவட்டம் வேலைவாய்ப்புத் துறையில் இவர் பணியாற்றியிருக்கிறார். மேலும் உணவு பாதுகாப்புத்துறையின் ஆணையராக பணியாற்றியுள்ளார். மேலும், கேரள மாநிலம், இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் திரிசூர் ஆகிய பகுதிகளிலும் பணியாற்றியிருக்கிறார். இவர் தற்போது கேரள மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
எம்.ஜி. ராஜமாணிக்கம், ஐஏஎஸ்
ராஜமாணிக்கத்தின் தந்தை படித்த திருவாதவூர் அரசுப் பள்ளியில் 25 லட்சம் மதிப்பிலான ‘ஸ்மார்ட்’ வகுப்புகள், தங்கள் கிராம இளைஞர்களை அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் இலவச பயிற்சி மையம் ஆகியவற்றையும் அமைத்து சிறப்பு பணிகளை செய்து வருகின்றனர். மேலும் அவ்வப்போது தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தன்னார்வப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு, ராஜமாணிக்கம் ஏழ்மையில் படித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாக உயர்ந்ததைப்போலவே மாணவர்களும் வளர வேண்டும் என பயிற்சி வகுப்புகள் எடுத்து வருகிறார் அவர் தந்தை.
எம்.ஜி. ராஜமாணிக்கம், ஐஏஎஸ் மற்றும் அவர் மனைவி நிஷாந்தினி ஐ.பி.எஸ்
இவரின் மனைவி நிஷாந்தினி கேரள மாநிலத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும், ஏழ்மையான குடும்பங்களில் பிறந்து, தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படித்து வாழ்வில் பல முன்னேற்றங்களை கண்டவர்கள்.
மக்களுக்கான சேவையில் தம்பதி
ராஜமாணிக்கம் மற்றும் அவரது மனைவி நிஷாந்தினி இருவருமே இயற்கை வேளாண்மை மீது அதிக ஆர்வமும் அக்கறையும் கொண்டவர்கள். இந்த அக்கறையின் காரணத்தால் இவர்கள் பணியாற்றும் பகுதிகளில் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்களில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறார்கள். இதேபோல் சிறுவர் இல்லத்தில் அடைக்கப்பட்ட சிறார் குற்றவாளிகளின் அறிவுத்திறனை மேம்படுத்த புத்தகங்கள் வழங்கியும் வருகின்றனர்.
நள்ளிரவில் நிகழ்ந்த அர்ப்பணிப்பு, எம்.ஜி. ராஜமாணிக்கம், ஐஏஎஸ் குவியும் பாராட்டு :
கேரள மாநிலம் எர்ணாகுளம் மீட்புப்பணிகளுக்காக தமிழகத்தைச் சேர்ந்த ஜி ராஜமாணிக்கம் , வயநாடு சப்-கலெக்டர் என்எஸ்கே உமேஷ் ஆகிய இருவரும் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நள்ளிரவில் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிவாராண பொருட்கள் ஒரு வாகனத்தில் வந்தடைந்தது. அந்த வாகனத்தில் மக்களுக்கான பால், அரிசி மற்றும் பல பொருட்கள் இருந்தது.
வாகனத்தில் இருந்து நிவாரண பொருட்களை இறக்கிய அதிகாரி
நிவாரண பொருட்களை கொண்டு வந்த வாகனம், அனைத்து பொருட்களையும் இறக்கி வைத்துவிட்டு, மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் அந்த இரவு நேரத்தில், இறக்கி வைக்க ஆட்கள் இல்லாததால் அங்கேயே நின்றிருந்தது.
நிவாரண பொருட்களை தனது தோளில் தூக்கிச் சென்ற எம்.ஜி. ராஜமாணிக்கம், ஐஏஎஸ்
இதனை கவனித்த ராஜமாணிக்கம், உடனே களத்தில் இறங்கி அரிசி மூட்டை, பால் மற்றும் பிற பொருட்களை தனது தோளில் தூக்கிச் செல்ல தொடங்கினார். இதனை கவனித்த மற்றொரு அதிகாரி உமேஷ், தானும் முன்வந்து பொருட்களை இறக்கி வைத்தார்.
நிவாரண பொருட்களை தனது தோளில் தூக்கிச் சென்ற எம்.ஜி. ராஜமாணிக்கம், ஐஏஎஸ்
தனது பதவியை ஒரு அதிகாரமாக நினைக்காமல், மக்களின் சேவையை மட்டுமே கருத்தில் கொண்டு, ராஜமாணிக்கம் செய்த நற்பணியை கேரளா மற்றும் தமிழக மக்கள் பாராட்டி வருகின்றனர்.