எம்.கே.சூரப்பா, அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். வெளிமாநிலத்தை சேர்ந்த 3-வது துணைவேந்தர் இவர்!
எம்.கே.சூரப்பா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்! இவரை தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்கும் உயர் கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக நியமனம் செய்து தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
எம்.கே.சூரப்பா, மூன்று ஆண்டுகளுக்கு இந்த பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே பெங்களூரு ஐ.ஐ.டி. இயக்குனராக ஆறு ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். மேலும் இந்திய அறிவியல் மையத்தில் 24 ஆண்டுகள் பேராசிரியராகவும் பணியாற்றி உள்ளார். 150 ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ள இவர், உலோக பொறியியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த ராஜாராம் பதவிக் காலம் கடந்த 2016-ம் ஆண்டு மே 26-ம் தேதி நிறைவடைந்தது. அதன்பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக துணைவேந்தர் நியமிக்கப்படாமல் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் புதிய துணைவேந்தராக எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை துணைவேந்தர்களாக நியமிக்கும் நடைமுறை இதற்கு முன்பு இல்லை. ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளை தவிர்த்துவிட்டு அவரே துணை வேந்தர்களை நியமித்து வருகிறார்.
சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரிக்கு ஆந்திராவை சேர்ந்த சூரியநாராயண சாஸ்திரியை துணை வேந்தராக நியமனம் செய்தார். தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்திற்கு கேரளாவைச் சேர்ந்த பிரமிளா தேவியை துணை வேந்தராக நியமனம் செய்தார். அந்த வகையில் எம்.கே.சூரப்பா, தமிழக பல்கலைக்கழகத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள 3-வது வெளிமாநில கல்வியாளர் ஆவார்.
தொடர்ந்து வெளிமாநில கல்வியாளர்களை தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கு உயர் பொறுப்பில் நியமனம் செய்து வருவது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு தமிழக கல்வியாளர்கள் மத்தியிலேயே கடும் போட்டி இருந்தது. அவர்களை புறக்கணித்துவிட்டு, வெளிமாநில கல்வியாளர்களை நியமனம் செய்வது தமிழக கல்வியாளர்களை அவமானப்படுத்துவதுபோல இருக்கிறது என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
தமிழக உயர் கல்வி நிறுவனங்கள் அகில இந்திய அளவில் உயரிய இடத்திலேயே இருக்கின்றன. எனவே இங்கு வெளீமாநில கல்வியாளர்கள் உயர் பொறுப்புக்கு அவசியமில்லை. வெளிமாநில கல்வியாளர்களுக்கு தமிழக கல்வி நிறுவனங்களின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்துவதில் உளப்பூர்வமான ஈடுபாடு இருக்காது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சென்னை ஐஐடி.யில் அண்மையில் சமஸ்கிருதம் திணிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது. அதேபோல தமிழக கல்வி நிலையங்களில் இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றை திணிக்கு முயற்சியாக இந்துத்வா சார்ந்த வெளிமாநில கல்வியாளர்களை தமிழக உயர் கல்வி நிலையங்களில் நியமனம் செய்வதாகவும் சர்ச்சை எழுந்திருக்கிறது. ‘கல்வியை காவி மயமாக்கும் முயற்சி இது’ என தமிழ் அமைப்பினர் பலரும் விமர்சனம் செய்கின்றனர்.