கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் கூறியதற்கு பதிலடியாக இது கருதப்படுகிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசுகையில், ‘தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும்’ என கூறி வருகிறார். இதற்கு பதிலடியாக நீலகிரி பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி கருத்துகளை கூறினார்.
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து குன்னூரில் பிரச்சாரம் செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
கொடநாடு விவகாரத்தில் ஸ்டாலின் பொய் பேசுகிறார். கொடநாடு விவகாரத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. நீலகிரி தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் ஆ.ராசா எதுவும் செய்யவில்லை. நீலகிரி மாவட்டத்தை முன்னிலைப்படுத்த பல திட்டங்களை வகுத்தவர் ஜெயலலிதா.
தி.மு.க. தலைவராக இருந்த கலைஞர் 2 ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஏற்பட்ட நிலை குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தும். கலைஞரை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்று இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் நெருக்கத்தில் இரு பெரிய தலைவர்களின் மரணம் அரசியல் ஆக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.