![M Karunanidhi Health Updates: kauvery hospital](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2018/07/karunanidhi-759.jpg)
M Karunanidhi Health Updates: kauvery hospital
M Karunanidhi Health Updates: திமுக தலைவர் கருணாநிதிக்கு நேற்று மாலை உடல்நிலை பாதிக்கப்பட்டு பிறகு மீண்டும் சீரான நிலைக்குத் திரும்பினார். இதனால் காவேரி மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
M Karunanidhi Health Updates: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பின்னடைவும், காவேரி மருத்துவமனையை சூழ்ந்த பரபரப்பும்:
கடந்த 27ம் தேதி இரவு கருணாநிதிக்கு ஏற்பட்ட ரத்த அழுத்தம் குறைவால், அவர் ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பிறகு, அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் உடல்நிலை தேர்ச்சி பெறும் வரை மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக அவருக்குச் சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், நாடித் துடிப்புகள் அனைத்தும் சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர். திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று மதியம் மருத்துவமனைக்கு வந்து சென்றனர்.
![M Karunanidhi Health Updates: venkaiah naidu and banwarilal purohit](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2018/07/s825.jpg)
இந்நிலையில் நேற்று மாலை திடீரென கருணாநிதியின் உடல்நிலையில் மீண்டும் நலிவு ஏற்பட்டது. மாலை 6 மணிவில் திமுக தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் காவேரி மருத்துவமனையின் முன்பு குவியத் தொடங்கினார்கள். மருத்துவமனை வளாகத்தைச் சுற்றி மூன்று மடங்கு போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டது. அசம்பாவிதங்கள் ஏதும் நடந்து விடக் கூடாது என்று தடுப்பு பேரியர்கள் போடப்பட்டது.
![M Karunanidhi Health Updates: kauvery hospital police force](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2018/07/5084c86a-6cfc-4cd3-98db-8f116529eb15.jpg)
மாலை 7 மணியளவில் கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். முதலில் மகன் மற்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வர, பின்பு கனிமொழி, அழகிரி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கொள்ளு பேரப் பிள்ளைகள் அனைவரும் வரத் தொடங்கினர். இத்தனை நாள் இல்லாமல், நேற்று மாலை எண்ணிக்கை போடும் நேரத்திற்குள் குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனைக்கு விரைந்தது அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் பரபரப்பு மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
![M Karunanidhi Health Updates: kauvery hospital](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2018/07/99b78ef2-cf72-4ad7-ae19-9d7cfa705474.jpg)
இதே சமயத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் இன்று நடக்க இருந்த நிகழ்ச்சி ஒன்றை ரத்து செய்து, சென்னைக்குத் திரும்பினார். சென்னை திரும்பியவுடன் மருத்துவமனையில் இருக்கும் கருணாநிதியை அவர் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அந்த சந்திப்பி தள்ளி வைக்கப்பட்டு இன்று காலை மருத்துவமனைக்கு செல்கிறார் முதல்வர்.
தனது தலைவனை இழக்க நேரிடுமோ என்ற அச்சமும், துயரமும் மருத்துவமனை வளாகத்தை சூழத் தொடங்கியது. தொண்டர்களின் ஆதங்கம் அனைத்தும் திரண்டு, தடுப்பணையை உடைத்தெறிந்து மருத்துவமனையின் உள்ளே இருக்கும் கருணாநிதியின் செவிக்கும் எட்டும் வரை ஒலித்தது ‘எழுந்து வா, எழுந்து வா’ என்ற கோஷங்கள். நாத்திகவாதிக்காகக் கோவில்களில் அடித்த வழிபாட்டு மணியின் சத்தம் இறைவனுக்குக் கேட்டதோ இல்லையோ, தொண்டர்கள் தொண்டை கிழிய எழுப்பிய கோஷங்கள் தனது செவிகளுக்கு கேட்டதுபோல் உயிரை இறுக்கமாக பிடித்துக் கொண்டார் கருணாநிதி.
![M Karunanidhi Health Updates: kauvery hospital](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2018/07/s832.jpg)
இரவு 8 மணியில் இருந்து எந்த நேரமும் மருத்துவமனையில் இருந்து அறிக்கை வரலாம், கருணாநிதியின் உடல்நிலை குறித்து என்ன செய்தி வருமோ என்று காத்திருந்தனர். பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக “திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் தோய்வு ஏற்பட்டது உண்மை தான். ஆனால் தீவிர சிகிச்சையினால் தற்போது அனைத்தும் சீராக இருக்கிறது.” என்று அறிக்கை வெளியானது.
![M Karunanidhi Health Updates: kauvery hospital](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2018/07/karunanidhi-Health-kAUVERY-hospital-Report-29-07-2018-1.jpg)
இந்த அறிக்கையைத் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் உற்சாகத்தில் கலைஞர் மீண்டு வர வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். சில நேரத்திலேயே குடும்பத்தினரும் ஒவ்வொருவராக கோபாலப்புரம் இல்லத்திற்கு திரும்பிச் சென்றனர்.
அப்போது பேசிய ஆ. ராசா, “கலைஞர் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டு, தற்போது நன்றாக இருக்கிறார். எனவே யாரும் பதற்றமடைய வேண்டாம். தீவிர சிகிச்சையால் அவர் நலமாக இருக்கிறார். உடல்நலம் முன்னேற்றம் அடைந்துள்ளது” என்று கூறினார்.
காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு கலைந்து செல்லுமாறு தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியும் அவர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் லேசான தடியடி நடத்திக் கூட்டத்தை கலைத்தனர்.
![M Karunanidhi Health Updates: kauvery hospital](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2018/07/S835.jpg)
இருப்பினும், அனைவரும் கலைந்து செல்லாமல், பெரும்பாலான தொண்டர்கள் சாலையிலேயே படுத்து உறங்கினர். இன்று காலை முதல் மீண்டும் மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே குவியத் தொடங்கியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.