டெங்கு மலேரியா எச்1என்1 உள்ளிட்ட நோய் பாதிப்புகள் குறித்தும் அதனை தடுப்பது குறித்தும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திருச்சியில் ஆலோசனை நடத்தினார். அரசு மருத்துவமனைகளில் மருந்து இருப்பை பொதுமக்கள் அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை காய்ச்சல் முகாம்கள் மற்றும் பொது சுகாதாரப் பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள 385 ஒன்றியங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதனை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்துள்ளார். கூட்டத்தில் 385 சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர்கள் மற்றும் மருத்துவ பணிகள் இணை இயக்குனர்கள் பங்கேற்று உள்ளனர்.
இதில் எதிர்காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை பிரச்சனைகள் குறித்தும், அதற்கு தீர்வு காணும் வகையில் அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டது.
குறிப்பாக அடுத்த வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழை மற்றும் அதனால் ஏற்படும் டெங்கு மலேரியா எச்1என்1 உள்ளிட்ட நோய் பாதிப்புகள் குறித்தும் அதனை தடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
தமிழக முதலமைச்சர் சட்டசபையில் 78 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை அறிவித்தார்.
இந்த மையங்கள் 21 மாநகராட்சி மற்றும் 63 நகராட்சிகளில் அமைவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் 25 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைவதற்கான இடம் தேர்வு குறித்த அடிப்படை தகவல்களும் இந்த கூட்டத்தில் பகிரப்படும்.
அத்துடன் 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் உள்ளிட்ட நடைமுறையில் உள்ள சுகாதாரப் பணிகளுக்கான திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் நல்வாழ்வுத் துறையில் 4,308 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக எம்.ஆர்.பி. இடம் அறிக்கை தரப்பட்டு ஒவ்வொரு துறையாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
237 மருந்தாளுநர் பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முதலமைச்சர் மூலம் பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1,021 மருத்துவர்களை நியமனம் செய்ய கலந்தாலோசனை நடைபெற்று வருகிறது.
திருச்சி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக சுகாதாரப் பணிகள் இணை இயக்குனரிடம் அறிக்கையை கேட்கப்பட்டுள்ளது. அவர் அளிக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்த நிதியாண்டில் அதற்கான பணிகள் மற்றும் நடவடிக்கைகள் தொடங்கும். தமிழகத்தில் மருத்துவ சங்கங்கள் இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. அதில் அரசாணை 354-ஐ ஒரு பிரிவினரும், மற்றொரு பிரிவினர் அரசாணை 293-ஐயும் ஏற்றுக் கொண்டு உள்ளனர்.
இதில் 18 முறை இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. விரைவில் 354 மற்றும் 293 பிரிவுகளில் உள்ள ஷரத்துக்களை ஒன்றாக இணைத்து புதிய அரசாணை பிறப்பிக்கப்படும். தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக கூறி ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்.
பொதுமக்கள் 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மருந்து இருப்பு குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம். அதற்கு ஹெச் ஆர் மூலம் உரிய பதில் கிடைக்கும்.
காஞ்சிபுரத்தில் ரூ.300 கோடிக்கும் மேலான செலவில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தற்போது ஆறு லட்சத்து 90 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளது. முதல் டோசை 96 சதவீதம் பேரும், இரண்டாவது டோசை 92 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டு உள்ளனர் என்றார்.
செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.