/indian-express-tamil/media/media_files/2025/10/07/madhampatty-rangaraj-hc-2025-10-07-06-50-43.jpg)
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரீசில்டா இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் கடந்த ஜூலை மாதம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
பிரபல சமையல் நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரீசில்டாவிற்கும் இடையேயான தனிப்பட்ட தகராறு தற்போது சட்ட ரீதியான விசாரணையை எட்டியுள்ளது.
தனது இரண்டு குழந்தைகளும் பாதிக்கப்படுவதாகக் கூறி, தன்னைப்பற்றி பொதுவெளியில் அவதூறு கருத்துகளைப் பேசுவதற்கு ஜாய் கிரீசில்டாவிற்குத் தடை விதிக்கக் கோரி மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுவுக்குப் பதிலளிக்குமாறு ஜாய் கிரீசில்டாவிற்கு உத்தரவிட்டுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரீசில்டா இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் கடந்த ஜூலை மாதம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அப்போது, தங்கள் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டதாகவும், தான் ஆறு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் ஜாய் கிரீசில்டா தெரிவித்திருந்தார்.
ஆனால், அடுத்த மாதமே, மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரீசில்டா காவல் ஆணையரகத்தில் பரபரப்புப் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன்னை கர்ப்பமாக்கிவிட்டு அவர் ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், நீலாங்கரை காவல் துறையினர் மாதம்பட்டி ரங்கராஜ் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கச் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையில், ஜாய் கிரீசில்டா, சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களுக்குப் பேட்டி அளித்து, மாதம்பட்டி ரங்கராஜ் மீது தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தி, தனிப்பட்ட வீடியோக்களையும் வெளியிட்டார்.
இதனால், தனது நற்பெயர் பாதிக்கப்படுவதாகவும், தனிப்பட்ட வாழ்க்கை சீர்குலைவதாகவும் கூறி, ஜாய் கிரீசில்டா அவதூறு பேசுவதற்குத் தடை விதிக்கக் கோரி மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும், சமூக வலைதளங்களில் இருக்கும் அவதூறு வீடியோக்களை நீக்கவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த மனு நீதிபதி செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், "ஜாய் கிரீசில்டா தான் வைத்திருந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்துகிறார். அவரது தொடர்ச்சியான பேட்டிகள் காரணமாக மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டு குழந்தைகளும் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தனக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவிக்க அவருக்குத் தடை விதிக்க வேண்டும்" என்று வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இருவருக்கும் இடையேயான உறவு குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கப்படாத நிலையில், தற்போது இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தார்.
மேலும், இந்த மனு தொடர்பாக வரும் அக்டோபர் 22-ம் தேதிக்குள் ஜாய் கிரீசில்டா பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையைத் தள்ளி வைத்தார்.
இந்தத் தனிநபர் வழக்கு மட்டுமன்றி, ஜாய் கிரீசில்டா அவதூறு குற்றச்சாட்டுகளைப் பகிரங்கமாக வைக்கும்போது 'மாதம்பட்டி பாகசாலா' என்ற நிறுவனத்தையும் டேக் செய்து வந்ததால், அது தொடர்பாக அந்நிறுவனமும் ஜாய் கிரீசில்டா மீது தனியாக வழக்குத் தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.