பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் புதிய அறிவிப்பானை வெளியிட தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றுவருகிறது. முன்னதாக, உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக்கு முன்னர், தலைமை ஆசிரியர்கள் சிறப்பு இடமாற்ற கலந்தாய்வை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பதவி உயர்விற்கான கலந்தாய்வை தள்ளிவைக்க உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக வனஜா, பிரபு உள்ளிட்ட 41 இடைநிலை ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் ஆசிரியர் சக்தி வேல் என்பவர், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் என உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு புதன்கிழமை (அக்.26) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தபோது நீதிபதி கிருஷ்ணகுமார், “ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வகையில் புதிய அறிவிப்பாணை வெளியிட வேண்டும்” என உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில், “ஒரு கல்வி நிறுவனம் சிறந்த கல்வியை வழங்க அதன் ஆசிரியர்களின் தகுதியே காரணம். சிறந்த கல்வித் தகுதியைப் பெறாத ஆசிரியர்களால் தரமான கல்வியை வழங்க இயலாது” என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil