ஆசிரியர்கள் தேர்வில், 400 இடங்களை காலியாக வைப்பது குறித்தும், 400 பேரை தனிப்பிரிவாக பரிசீலிப்பது குறித்தும், அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், நொச்சிப்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் செனை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடந்த 2014-ம் ஆண்டுக்கு பின், ஆசிரியர்கள் பணிக்கு, நேரடித் தேர்வு நடத்தப்படவில்லை.
2013-ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். 2014 ஜனவரியில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். என்னுடன், 16,910 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இந்த நடைமுறையை முடித்ததால், எனக்கு பணி நியமனம் வரும் என எதிர்பார்த்திருந்தேன். ஆனால், 2018ல் பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்த ஒரு உத்தரவில், தகுதியானவர்கள் மத்தியில் இருந்து, போட்டித் தேர்வு வாயிலாக தேர்ந்தெடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழ அரசு ஆசிரியர்கள் தேர்வில் ஏற்கனவே, பின்பற்றிய நடைமுறையை கைவிட்டு, புதிதாக போட்டித் தேர்வு என்ற முறையை அறிமுகப்படுத்தியது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பணி நியமனத்துக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
ஆனால், நாங்கள் சமீபத்தில் படிப்பை முடித்தவர்களுடன், போட்டியிட வேண்டும் என்பது, சரிசமமான போட்டியாக இருக்காது. எனவே, எங்களுக்கு முன்னுரிமை அளித்து, பணியில் நியமிக்க வேண்டும். 2018-ல் பிறப்பித்த உத்தரவை, எங்களுக்கு அமல்படுத்தக் கூடாது.” என்று மனுவில் கூறியுள்ளார். மேலும், இதே போல, பலரும் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷபீக் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போட்து மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என். கவிதா ராமேஷ்வர், “கடந்த மாதம், 2,200 ஆசிரியர்கள் பணி இடங்களுக்காக புதிதாக தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், வழக்கு தொடர்ந்த 400 பேரையும் தேர்வு எழுதும்படி வற்புறுத்தாமல், அவர்களை தனிப் பிரிவாக கருதி நியமனம் செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர் சிலம்பண்ணன், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் நீலகண்டன், “இந்த வழக்கின் இறுதி முடிவுக்கு கட்டுப்பட்டது என, கடந்த அக்டோபரில் வெளியிட்ட தேர்வு அறிவிப்பில் கூறியுள்ளோம். அந்த தேர்வு அறிவிப்பை எதிர்த்தும், வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனி நீதிபதி முன், விசாரணைக்கு வர உள்ளது” என்று கூறினார்.
இதையடுத்து, கடந்த மாதம் புதிதாக தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2,200 இடங்களில், 400 இடங்களை காலியாக ஒதுக்கி வையுங்கள். இவர்கள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்து, நியமனத்துக்காக பல ஆண்டுகள் காத்திருக்கின்றனர். அரசு, அவ்வப்போது புதிது புதிதாக திட்டங்களை அறிமுகம் செய்கிறது. தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய முறையை, இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்திக் கொள்ளுங்கள். 400 இடங்களை ஒதுக்கி வைத்து விட்டு, மற்ற இடங்களுக்கு தேர்வை நடத்திக் கொள்ளுங்கள். அவர்களை தனிப் பிரிவாக பரிசீலிப்பது குறித்து, அரசுக்கு அறிவுரை கூறுங்கள்.
பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலரையும், நீதிமன்றத்தில் இருக்க சொல்லுங்கள். அரசின் நிலைப்பாட்டை, அடுத்த விசாரணையின் போது தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“