scorecardresearch

லூப் சாலையில் போக்குவரத்து முடக்கத்தை ஏற்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

போராட்டத்தில் ஈடுபட்டு மெரினா இணைப்புச் சாலையில் போக்குவரத்தை முடக்குவதை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

madras high court
Madras-HC

சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் இடையிலான மெரினா லூப் சாலையை ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்படுவதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, லூப் சாலையின் மேற்கு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அங்கு உள்ள உணவகங்களுக்கு உரிய உரிமம் வழங்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முற்பட்டபோது, சாலையில் மீன்களை கொட்டி, படகுகளை நிறுத்தி அப்பகுதி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.பி.பாலாஜி அமர்வில் நேற்று (ஏப்ரல் 18) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி மீனவர்கள் தரப்பில் இடையீட்டுமனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், `மீனவர்களின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டது தான் லூப் சாலை. இது பொது சாலை அல்ல. சாந்தோம் சாலை விரிவாக்கம் செய்யப்படும் வரை தற்காலிகமாக பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் என்றுதான் மாநகராட்சி உத்தரவாதம் அளித்தது. ‘லூப் சாலையை விரிவாக்கம் செய்யக் கூடாது. நடைபாதைகள் அமைக்கக் கூடாது’ என்ற தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை மீறி, இந்த சாலையை மாநகராட்சி விரிவுபடுத்தியுள்ளது என்று மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாநகராட்சி தரப்பில், “மீன் விற்பனையை முறைப்படுத்த கோரியே இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இதை மாநகராட்சி முறைப்படுத்தும்” என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தரப்பில் அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், லூப் சாலை ஆக்கிரமிப்புகள் கடந்த 12-ம் தேதி முதல் அகற்றப்பட்டு வருகின்றன.

அப்பகுதி மீனவர்களின் எதிர்ப்புக்கு நடுவே, 75 மீன் கடைகள், 15 குடிசைகள், 21 பெட்டிக்கடைகள் மட்டுமின்றி, சாலையின் மேற்கு பகுதியில் உள்ள உணவகங்கள், நடமாடும் உணவகங்கள் போன்ற ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டுள்ளன. உரிமம் இன்றி செயல்பட்டு வந்த 20 உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீன் வாங்க வருவோர் தங்கள் வாகனங்களை கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் பகுதிகளில் நிறுத்துமாறு போலீஸார் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் மீனவர் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நீதிமன்றம் அனுமதி அளித்தால், மீன் சந்தை கட்டுமானப் பணி முடியும் வரை,போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலையின் மேற்குபக்கம் உள்ள காலி இடத்தில் கடைகளை அமைத்து, சாலையை ஒழுங்குபடுத்தவும் தயாராக உள்ளோம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும், கடந்த ஒருவாரமாக சில சுயநலவாதிகளின் தூண்டுதலின் பேரில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு சாலையில் போக்குவரத்தை முடக்குவதை சகித்துக் கொள்ள முடியாது. லூப் சாலையை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். சாலையின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை.

எனவே, மீனவர்கள் சட்டம் -ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம். நடைபாதையில் உணவு சமைப்பதை தடுக்க வேண்டிய கடமை மாநகராட்சிக்கு இருக்கிறது. இதில் மாநகராட்சி தரப்பில் விடுக்கப்படும் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி நீதிபதிகள் வழக்கு விசாரணையை இன்றைக்கு (ஏப்ரல் 19) ஒத்தி வைத்தனர். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Madras hc warns of action against people blocking loop road