எழுத்தாளர்களுக்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து கவிஞர் வைரமுத்து வழக்கு தொடர்ந்த நிணலயில், எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்தது உணர்வு பூர்வமான விஷயம். இது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு தெரியாது. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இணையான ஒரு அரசாங்கத்தை நடத்துவது துரதிஷ்டவசமானது." என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஞானபீடம், சாகித்ய அகாடமி விருதுகள் பெற்று தமிழுக்கு தொண்டாற்றிய எழுத்தாளர்களை கவுரவிக்கும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கனவு இல்லம் எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், எழுத்தாளர்களுக்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டை ரத்து செய்ததை எதிர்த்து, கவிஞர் வைரமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வைரமுத்து தரப்பில், ஏற்கெனவே ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை பின் தேதியிட்டு அமல்படுத்துவதாக அரசு தலைமை வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவருக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்று வைரமுத்து தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் செயல். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இணை அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர். இது துரதிருஷ்டவசமானது என்று கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர், "எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்தது உணர்வுப்பூர்வமான விஷயம். இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தெரியாது. அவர்கள் அதிகார தொனியிலேயே செயல்படுவார்கள். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இதை ஒருபோதும் அனுமதித்து இருக்க மாட்டார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை இணை அரசாங்கம் நடத்த அனுமதித்தால், அது பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று நீதிபதி எச்சரித்தார்.