Madras High Court: தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1,825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் (தேசிய எஸ்.சி.,எஸ்.டி. ஆணையம்) பா.ஜ.க மாநில நிர்வாகி சீனிவாசன் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் மீதான விசாரணைக்கு அனுப்பபட்ட நோட்டீசை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
விசாரணை
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு கடந்த 8 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது முரசொலி அறக்கட்டளை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், பஞ்சமி நிலம் இல்லை என அரசு அறிக்கை அளித்ததால், புகாரை முடிக்க முடிவெடுத்துள்ளதாக ஆணையம் கூறியதாகவும், ஆனால் திடீரென புகார் நிலுவையில் உள்ளதாக தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், 'பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரங்களை புகார்தாரர் சமர்ப்பிக்கவில்லை. அரசியல் காரணத்திற்காக தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் இந்த புகாரை நிலுவையில் வைத்துள்ளது. அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது. ஆணையம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. பஞ்சமி நிலமா இல்லையா என வருவாய் துறை தான் விசாரிக்க முடியுமே தவிர, தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் தலையிட முடியாது என்றும் வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார்.
தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், பட்டா மற்றும் விற்பனை பத்திரம் ஆகியவை மட்டுமே உரிமையாளரை முடிவு செய்வதற்கான இறுதி ஆதாரம் இல்லை என வாதிட்டார். ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க கூடாது எனவும், விசாரணையை தொடர்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.
வழக்கு நிலுவையில் இருந்த போது பட்டா வழங்கப்பட்டதாகவும், அதனால் ஆணையம் விசாரணை செய்ய அதிகாரம் உள்ளது என்றும் புகார்தாரர் ஸ்ரீநிவாசன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி கூறினார். வில்லங்க சான்றிதழில் 1974 ஆம் ஆண்டு மாதவன் நாயர் பெயரோ, அஞ்சுகம் பதிப்பகம் பெயரோ இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தீர்ப்பு
இந்நிலையில், இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக எழுந்த புகாரில், தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் அனுப்பிய பழைய நோட்டீசை கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. புதிய நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார். அனைத்து தரப்புக்கும் வாய்ப்பளித்து விளக்கத்தை பெற்று விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.
மேலும், தேசிய பட்டியலினத்தோர் ஆணைய துணைத் தலைவராக எல்.முருகன் (தற்போதைய மத்திய இணை அமைச்சர்) இருந்தபோது முரசொலி அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்ட நோட்டீஸ் செல்லாது என்றும், தேசிய பட்டியலின ஆணையம் விசாரிக்க தடை கேட்டு முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“