தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க தேர்தல் தொடர்பான சர்ச்சை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி முன்பு இன்று வியாழக்கிழமை (பிப். 20) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி, “பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர்கள் பயன்படுத்தப்படுவது குறித்து அரசு விரிவான விளக்கமளிக்க வேண்டும். மாணவர்களிடையேயான சாதிப் பாகுபாடு சர்ச்சையான விவகாரத்தில் அரசு ஒருநபர் ஆணையம் அமைத்துள்ள நிலையில், அந்த ஆணையத்தின் அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், தெருப் பெயர்களில் சாதிப் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பின், பெயரில் இருக்கும் சாதியை நீக்கிவிட்டு முதன்மை பெயரை மட்டும் தெருக்களுக்குச் சூட்ட அரசு தீர்மானித்திருந்தது. அதனடிப்படையில், இப்போது தனிநபர்களின் பெயரில் உள்ள தெருக்களுக்கு அந்த நபர்களின் சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டு முதன்மை பெயரால் மட்டுமே அழைக்கப்படுகின்றன.
குறிப்பிட்ட சாதிப் பெயர்களைச் சூட்டிக்கொண்டு செயல்படும் சங்கங்களில், அவற்றின் கல்வி நிறுவனங்களில் மேற்குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தோர் மட்டுமே சேர்ந்து கொள்ள அனுமதிக்கப்படுவது குறித்தும் அரசு விளக்கமளிக்க வேண்டும். அரசமைப்பின் குறிக்கோளான ‘சாதிகளற்ற சமூகம்’ என்ற நிலையை அடையவே சாதிப் பெயர்கள் பயன்படுத்தப்பட வேண்டும். அதேபோல, விளிம்புநிலை மக்களை மேம்படுத்தவும் பாகுபாடுகளைக் களையவும் இடஒதுக்கீடு வழங்கவும்தான் சாதிப் பெயர்கள் பயன்படுத்தப்படலாம்.
சாதிப் பாகுபாடு பெற்றோர்களின் கண்களைக்கூட மறைக்கிறது. இதனால், அவர்கள் தாங்கள் பெற்ற பிள்ளைகளைக் கொல்லவும் தயக்கம் காட்டுவதில்லை என்பதையும் சமூகத்தில் பார்க்க முடிகிறது. கிறிஸ்தவ, முஸ்லிம் சமூகங்களிலும்கூட சாதிப் பாகுபாடு நிலவுகிறது. மேம்பட்ட சமூகங்களிலும் சாதியுணர்வு நீடிக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.