/indian-express-tamil/media/media_files/SpsbESaCGT85jlZvG9v4.jpg)
அரசின் மேல் முறையீடு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மதுரை திருவாதவூர் அகதிகள் முகாமை சேர்ந்தவர் அதிபதி. இவர் கடந்த 2014 ஆண்டு உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "என் 11 வயது மகள் சரண்யா, 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 12.5.2014-ல் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சரண்யா உயிரிழந்தார். அதற்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த மனுவை அப்போது விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'சிறுமி உயிரிழப்புக்கு காரணமாக சுவரை கட்டிக் கொடுத்தது அரசு தான். இதற்கு அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும். இதனால் மனுதாரருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அரசு வழங்க வேண்டும்' என்றும், மேலும் அங்குள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் கண்ணியமான முறையில் நடத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், சிறுமிக்கு 5 லட்சம் பணம் வழங்க பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி அரசு தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று (புதன்கிழமை) நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் அருந்தி இறந்து போனவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் பணம் கொடுப்பதற்கு அரசிடம் நிதி உள்ளது. ஆனால். ஒரு குழந்தை சுவர் இடிந்து விழுந்து இறந்துள்ளது. அதற்கு உரிய நிதி கொடுக்க முடியாமல் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது அரசுக்கு வெட்கமாக இல்லையா? எவ்வாறு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தீர்கள்? என்று கேள்வி எழுப்பினர். மேலும், மேல்முறையீடு தாக்கல் செய்த அதிகாரிக்கு ரூபாய் 50,000 அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
செய்தி: சக்தி சரவணன் - மதுரை மாவட்டம்
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.